Home நாடு எம்எச்370 தேடுதல் நடவடிக்கை தொடரும்: நஜிப் உறுதி

எம்எச்370 தேடுதல் நடவடிக்கை தொடரும்: நஜிப் உறுதி

524
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 – எம்எச்370 மாயமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அந்த விமானத்தை தேடும் பணி நீடிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நஜிப்ரசாக்.காம் என்ற தனது இணையதளத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை உணர்வுப்பூர்வமான அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

najib“இன்றைய தினம் நாம் அனைவரும் எம்எச்370வில் பயணம் செய்த 50 மலேசியர்கள் உட்பட 239 பேரையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்த ஒருங்கிணைந்துள்ளோம். நமது பிரார்த்தனைகள் எப்போதுமே அவர்களுடன் உள்ளது. அவர்களின் பிரிவால் வாடுபவர்களின் சோகத்தை நாம் பகிர்ந்து கொள்கிறோம்,” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.

விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே இந்தத் தேடுதல் நடவடிக்கை தான் சிக்கலானது மற்றும் தொழில்நுட்ப ரீதியில் சவால் மிகுந்தது என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“விமானத் தேடுதல் நடவடிக்கைக்காக மிகப்பெரிய அனைத்துலக குழு ஒன்றை மலேசியா அமைத்துள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் உதவியையும் என்றும் மறக்க மாட்டோம். எம்எச்370 எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய ஓய்வின்றிப் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி,” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.

விமானத் தேடுதல் நடவடிக்கைகள் நீடிக்கும் என பயணிகளின் குடும்பத்தாருக்கு உறுதியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அன்புக்குரியவர்களை பிரிந்து வாடுபவர்களின் சோகத்தையும் மனவலியையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை எனக் கூறியுள்ளார்.

“பல கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலையில், விமானத்தின் சிதைந்த பாகங்களும் கிடைக்காத நிலையில், மனவலியை ஜீரணித்துக் கொள்வது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சிரமமான ஒன்றாகவே இருக்கும். நமக்குக் கிடைத்த குறைந்த அளவு ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்துலக கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எம்எச்370 விமானம் நிச்சயம் கண்டுபிடிக்கப்படும் என நம்புகிறோம்,” என்று நஜிப் மேலும் தெரிவித்துள்ளார்.