Home இந்தியா தள்ளிப்போகும் தீர்ப்பு – மனக்குழப்பத்தில் ஜெயலலிதா!

தள்ளிப்போகும் தீர்ப்பு – மனக்குழப்பத்தில் ஜெயலலிதா!

423
0
SHARE
Ad

Jayalalithaa-case-judgementசென்னை, ஏப்ரல் 16 – ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு  தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வரும் பவானி சிங்கை நீக்கக் கோரிய திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனு மீதான விசாரணை, அரசியல் அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளதால், அந்த வழக்கின் தீர்ப்பு மூன்று மாத காலத்திற்கு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞராக செயல்பட்டு வரும் பவானி சிங், ஜெயலலிதாவிற்கு சாதகமாக நடக்கிறார் என்று கூறி அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங் இந்த வழக்கில் செயல்படுவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், ஏப்ரல் 15-ம் தேதி வரை ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கத் தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று அன்பழகனின் மனு, இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும், பவானி சிங் நியமனம் குறித்து இரு மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தனர். இதன் காரணமாக, வழக்கு வேறு நீதிபதிகளின் அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால், பவானி சிங் நியமனம் குறித்த தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பும் மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஜெயலலிதா மிகுந்த மனக்குழப்பத்தில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.