Home இந்தியா வாஜ்பாய்க்கான வங்கதேச விடுதலைப்போர் விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்!

வாஜ்பாய்க்கான வங்கதேச விடுதலைப்போர் விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்!

539
0
SHARE
Ad

modiடாக்கா, ஜூன் 8 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வங்காளதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டின் உயரிய விருதான விடுதலைப்போர் கவுர விருதினை இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வங்காள தேச அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி, வாஜ்பாய் சார்பில் நேற்று அதனைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைப்போர் துவங்கிய சமயத்தில், அப்போது பாரதீய ஜனசங்கத்தின் உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய வாஜ்பாய், வங்காளதேசத்தின் விடுதலைக்காக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அந்நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தர பாடுபட்டார். இதன் காரணமாகவே வாஜ்பாயைக் கவுரவிக்கும் பொருட்டு வங்காளதேசம் இவ்விருதினை அறிவித்திருந்தது.

வயது மூப்பின் காரணமாக வாஜ்பாயால் வங்கதேசம் வரை சென்று இந்த விருதினை வாங்க முடியாது என்பதால், அவரது சார்பில் பிரதமர் மோடி இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

வாஜ்பாயைக் கவுரவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த விருது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

“இந்த விருதினைப் பெற்றவுடன் எனக்கும், இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய மரியாதையும், பெருமை சேர்ந்துள்ளதாக நான் உணர்கிறேன். தனது முழு வாழ்க்கையையும் நாட்டின் வளர்சிக்காக அர்ப்பணித்த அடல் ஜி, இன்று கவுரவிக்கப்பட்டு உள்ளார். அவர் சாதாரண மனிதனின் உரிமைக்காகப் பலமாகப் போராடிய உன்னதமான தலைவர். அவர் தான் என்னைப் போன்ற அதிகமான கட்சித் தொண்டர்களுக்கு உந்துசக்தி. இந்த விருதிற்காக எனது நன்றியை வங்காளதேச அரசிற்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்த இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் இந்த விருது கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது அதனைக் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.