Home 13வது பொதுத் தேர்தல் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெரும்பான்மையில் மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – அன்வார் கணிப்பு

10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெரும்பான்மையில் மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – அன்வார் கணிப்பு

661
0
SHARE
Ad

Anwar-Slider-3கோலாலம்பூர், மார்ச் 8 – எதிர்வரும் பொதுத் தேர்தலில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெரும்பான்மையில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அதே வேளையில் நாட்டின் 13 மாநிலங்களில் குறைந்தது ஆறு மாநிலங்களையும் கைப்பற்றும் என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் அடுத்த பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுபவருமான அன்வார் இப்ராகிம் கோலாலம்பூரில் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

புளும்பெர்க் செய்தி சேவையை மேற்கோள் காட்டி மலேசியாகினி இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றது.

ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் வேலையாக மக்கள் கூட்டணி ஆட்சியில் பத்திரிக்கைகளுக்கான அனுமதி சுதந்திரமயமாக்கப்படும் என்று கூறிய அன்வார், ஆட்சி அமைத்த 100 நாட்களுக்குள் முக்கிய அரசாங்கக் கொள்கைகள் பல மாற்றம் பெறும் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

கல்வி, ஊழல், அரசாங்கக் குத்தகைகள் போன்ற அம்சங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அதே வேளையில் தன்னை 1998ஆம் ஆண்டில் அரசாங்கத்திலிருந்து நீக்கிய முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் உட்பட யார் மீதும் பழிவாக்கும் நோக்கில் புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகள் அமையாது என்றும் அன்வார் உறுதியாகக் கூறினார்.

“நான் அளவுக்கதிகமாக நம்பிக்கை கொண்டிருப்பவன் போல பேச விரும்பவில்லை. இருந்தாலும் நாங்கள் மிகவும் சாதகமான பெரும்பான்மையில் வெற்றி பெறுவோம். சாதகமான பெரும்பான்மை என்றால் 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கூடுதலான பெரும்பான்மையாக அது இருக்கும்” என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.

தற்போதைய மலேசிய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் தேதி முடிவுறும் என்பதால் அதற்கு முன்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக் பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.