Home உலகம் காஷ்மீர் பிரச்னைக்கு பயங்கரவாதம் தீர்வாக அமையாது

காஷ்மீர் பிரச்னைக்கு பயங்கரவாதம் தீர்வாக அமையாது

549
0
SHARE
Ad

henaஇஸ்லாமாபாத், மார்ச்.14- காஷ்மீர் பிரச்னைக்கு பயங்கரவாதம் தீர்வாக அமையாது என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் (படம்) கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளுடனான கடைசி கூட்டத்தின்போது அமைச்சர் ரப்பானி கூறியதாவது:-

இந்தியாவுடன் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வழக்கமான வழிகளை விடுத்து ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். பயங்கரவாதமோ ராணுவ பலமோ இந்தப் பிரச்னைக்கு தீர்வாக அமையாது.

#TamilSchoolmychoice

காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா இப்போது மறுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அந்நாட்டுடன் வர்த்தக உறவை வளர்த்துக் கொள்வது சிறந்த வழியாக அமையும்.

நாம் அந்நாட்டுடனான வர்த்தகத்தை பலப்படுத்தினால், அங்குள்ள மக்கள் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துவார்கள். இதன்மூலம் மட்டுமே காஷ்மீர் மக்கள் பிரச்னையிலிருந்து விடுபட முடியும்.

இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை நிலவியபோதும், பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்று ஆஜ்மீர் தர்காவில் வழிபாடு நடத்திவிட்டு வந்தது பாராட்டுக்குரியது.

அமெரிக்கர்களுக்கு பணிந்து போகக்கூடிய அளவுக்கு நாம் பலமிழந்தவர்களாக இல்லை. உதாரணமாக, பாகிஸ்தான் எல்லையில் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, ஆப்கனில் உள்ள அமெரிக்க படைகளுக்கு அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லும் வழியை மூடினோம். பிறகு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டதையடுத்து அவ்வழியை மீண்டும் திறந்துள்ளோம் என்றார் ரப்பானி.