Home நாடு “மகாதீரைக் குறை கூறுங்கள்” – வேதமூர்த்தி குற்றச்சாட்டுகளுக்கு தேவமணி மறுப்பு

“மகாதீரைக் குறை கூறுங்கள்” – வேதமூர்த்தி குற்றச்சாட்டுகளுக்கு தேவமணி மறுப்பு

1403
0
SHARE
Ad

Datuk-SK-Devamany-1கோலாலம்பூர் –கடந்த சனிக்கிழமை (25 நவம்பர் 2017) சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதும், அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி மஇகா மீது முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி வன்மையாக மறுத்துள்ளார்.

“மஇகாவைக் குற்றம் சாட்டுவதை விட, பக்காத்தானின் தலைவராக இருக்கும் துன் மகாதீரைத்தான் வேதமூர்த்தி குற்றம் சாட்ட வேண்டும். காரணம் அவரது பதவிக் காலத்தில்தான் இந்திய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டது” என்றும் சாடிய தேவமணி, வேதமூர்த்தி சுமார் ஓராண்டுக்கு துணையமைச்சராக இருந்த காரணத்தால், அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது அவருக்கும் தெரியும் என்று கூறினார்.

Hindraf-Waytha-logo-Featureகடந்த சனிக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் மஇகாவை முற்றாகத் துடைத்தொழிப்போம் என்று சூளுரைத்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஹிண்ட்ராப்பின் இதே நிகழ்ச்சியில் ‘தேசிய முன்னணிக்கு வாக்களிக்காதீர்கள்’ என்பதைக் குறிக்கும் விதமான ‘சீரோ வோட் ஃபோர் பிஎன்’ (Zero Vote for BN) என்ற பிரச்சாரமும் தொடங்கப்பட்டது.

hindraf-logo-வேதமூர்த்தியின் கருத்துகள் தொடர்பில் ஆங்கில இணைய ஊடகமான பிரி மலேசியா டுடே ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் தேவமணி மேற்கண்டவாறு கூறினார். “அந்தக் காலத்திலேயே எனக்கு வேதமூர்த்தியைத் தெரியும். பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மஇகா எதுவும் செய்யவில்லை என்று கூறக் கூடாது. ஹிண்ட்ராப் பேரணி விவகாரத்தை தேசிய முன்னணியும், மஇகாவும் முறையாகக் கையாளவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதன் பிரதிபலனாகத்தான் 2008 பொதுத் தேர்தலில் பலத்த தோல்விகளையும் சந்தித்தோம். ஹிண்ட்ராப் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. இருப்பினும் அதன் பிறகு, தீவிர கருத்துப் பரிமாற்றங்கள், ஆய்வுகளைத் தொடர்ந்து தேசிய முன்னணியும், மஇகாவும் இந்திய சமுதாயத்தை பல முனைகளிலும் மேம்படுத்த உறுதி பூண்டோம்” என்று தேவமணி மேலும் கூறினார்.

malaysian-indian-blue-print-launchஇந்திய சமுதாயத்தின் அனைத்து பிரச்சனைகளையும் ஆராய்ந்துதான் இந்தியர்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு 2008-இல் அமைக்கப்பட்டது என்று கூறிய தேவமணி, அதைத் தொடர்ந்து இந்திய சமுதாயத்தை வலுப்படுத்தவும், தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்தவும் திட்டங்கள் வரையப்பட்டன என்றார்.

பிரதமர் துறை எடுத்து வந்த பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக, இரண்டு ஆண்டுகால ஆய்வுகளுக்கும், கருத்துப் பதிவுகளுக்கும் பின்னர் மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் என்ற வியூகப் பெருந்திட்டம் தொடங்கப்பட்டது.

“எனவே, ஆத்திரம் கொண்டு எங்களைத் தாக்குவதற்காக பேசாதீர்கள். வந்து பாருங்கள், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை! ஆத்திரக்காரர்கள் வாழ்க்கையில் வெகுதூரம் செல்ல முடியாது” என்றும் தேவமணி அறிவுறுத்தினார்.