Home நாடு அஸ்மின் அலிக்கு பாஸ் தலைவர்களும் வாழ்த்து

அஸ்மின் அலிக்கு பாஸ் தலைவர்களும் வாழ்த்து

510
0
SHARE
Ad

Hadi Awang PAS President தும்பாட், செப்டம்பர் 24 – சிலாங்கூர் புதிய மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றுள்ள அஸ்மின் அலிக்கு பாஸ் தலைவர் ஹாடி அவாங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், சிலாங்கூர் மாநிலத்தில் புதிய மந்திரி பெசார் நியமனத்தில் பாஸ் கட்சி, பிகேஆர் கட்சியுடன் கொண்டிருந்த பிணக்கும், முரண்பாடும் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சிலாங்கூர் சுல்தான் தம்மிடம் ஒப்படைக்கும் அனைத்துப் பணிகளையும் அல்லாவின் வழிகாட்டுதலின் பேரில் அஸ்மின் அலி சிரத்தையுடன் பொறுப்பாக நிறைவேற்றுவார் எனத் தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆறு ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்திற்காக அறிவார்ந்த சேவை வழங்கிய முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட்டிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹூசாம் மூசாவும் வாழ்த்து

இதற்கிடையே பாஸ் துணைத் தலைவர் டத்தோ ஹுசாம் மூசாவும் அஸ்மின் அலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தும்பாட்டில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவருக்கு (அஸ்மின்) எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்றார்.

அஸ்மின் அலி மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டதன் மூலம் பக்காத்தான் வலுப்படுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், பக்காத்தானின் ஆற்றல், செயல்பாடு என்பது எந்தவொரு தனி மனிதரின்
பொறுப்பிலும் இல்லை என்றார்.

“யாருடைய தலைமை என்பது முக்கியமல்ல… லஞ்சம், பாரபட்சம், புறக்கணிப்பு எனும் கலாச்சாரத்தை பாரிசான் பின்பற்றும் வரையில் மிகச்சிறந்த நிர்வாகத்தை நாங்கள் வழங்குவோம்,” என்றார் ஹுசாம் மூசா.

மந்திரி பெசார் விவகாரம் தொடர்பில் பாஸ் கட்சியில் ஏற்பட்ட அண்மைய கருத்து வேறுபாடு குறித்தும் அவர் கருத்துரைத்தார்.

“ஒரு அணுவானது குறிப்பிட்ட புள்ளியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நேர்மறை, எதிர்மறை சக்திகளைப் பயன்படுத்தும். அதுபோன்றதுதான் இந்தச் சிக்கலும். எந்தக் கட்சியிலும் பூகம்பங்களும் அதிர்வுகளும் இருக்கவே செய்யும். இதனால் சில ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும். எனினும் எப்படியேனும் அந்த
நிலைமையைச் சமாளித்தாக வேண்டும்,” என்றார் ஹுசாம்  மூசா.