![](https://selliyal.com/wp-content/uploads/2024/06/Mohd-Azizi-Nenggiri-Kelantan-19062024-e1718811545789.jpg)
கோத்தாபாரு: கிளந்தானிலுள்ள நெங்கிரி சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டமன்ற அவைத் தலைவர் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த சட்டமன்றத்திற்கான உறுப்பினர் முகமட் அசிசி அபு நைம் இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்லப் போவதாக தெரிவித்தார்.
பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த முகமட் அசிசி கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெங்கிரி தொகுதியில் பாஸ் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முகமட் அசிசியின் சட்டமன்றம் காலியானது இன்று புதன்கிழமை (19 ஜூன்) முதல் நடப்புக்கு வருகிறது.
மத்திய அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் ஆதரவு தெரிவித்ததற்காக முகமட் அசிசி கடந்த ஜூன் 13-ஆம் தேதி பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பெர்சாத்து கட்சி அவரின் உறுப்பியம் நீக்கத்தை மாநில சட்டமன்றத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து அவரின் சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டமன்ற அவையின் தலைவர் அறிவித்தார்.
முகமட் அசிசி அபு நைம் கிளந்தானிலுள்ள குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமாவார். பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவரும் ஒருவராவார்.