Home நாடு தியான் சுவா தேர்தலில் போட்டியிடலாம் – நீதிமன்றம் அபராதத்தைக் குறைத்தது!

தியான் சுவா தேர்தலில் போட்டியிடலாம் – நீதிமன்றம் அபராதத்தைக் குறைத்தது!

742
0
SHARE
Ad

கோலாலம்பூர் – காவல்துறை அதிகாரியை அவமதித்த வழக்கில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை நிலைநிறுத்திய ஷா ஆலம் உயர்நீதிமன்றம், அவரது அபராதத் தொகையை 3000 ரிங்கிட்டிலிருந்து 2000 ரிங்கிட்டாகக் குறைத்தது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 509-ன் கீழ் கடந்த மார்ச் மாதம் தனக்கு ஷா ஆலம் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார் தியான் சுவா.

அம்மேல்முறையீடு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

#TamilSchoolmychoice

விசாரணையின் முடிவில் தீர்ப்பு வழங்கிய ஷா ஆலம் உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் கரீம் அப்துல் ரஹ்மான், அமர்வு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிலைநிறுத்தினார்.

எனினும், 3000 ரிங்கிட் விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையை 2000 ரிங்கிட்டாகக் குறைத்தார்.

இதனையடுத்து, தியான் சுவா, 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் தகுதியை அடைகின்றார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 2 ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேல் அபராதம் செலுத்தினாலோ அல்லது 1 ஒரு வருட சிறைத் தண்டனை பெற்றாலோ, அவர் இயல்பாகவே தனது நாடாளுமன்றப் பதவியை இழப்பார் என்றும் மீண்டும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் மலேசியச் சட்டத்தில் இடமிருப்பது குறிப்பிடத்தக்கது.