Home 13வது பொதுத் தேர்தல் தாப்பாவில் சரவணனை எதிர்த்து பிகேஆர் வேட்பாளர் ஹிண்ட்ராப் கே.வசந்தகுமார்?

தாப்பாவில் சரவணனை எதிர்த்து பிகேஆர் வேட்பாளர் ஹிண்ட்ராப் கே.வசந்தகுமார்?

831
0
SHARE
Ad

Vasanthakumar-Featureமார்ச் 28 – தேசிய முன்னணி மீண்டும் வெற்றி கொள்ள வாய்ப்புள்ள தொகுதி என்றும், ம.இ.கா மீண்டும் தற்காத்துக் கொள்ள வாய்ப்புள்ள தொகுதி என்றும் கருதப்பட்டு வந்த தாப்பா நாடாளுமன்ற தொகுதியிலும் தற்போது கடுமையான போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காரணம், ஹிண்ட்ராப் போராட்டவாதியும், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருந்த 5 ஹிண்ட்ராப் தலைவர்களில் ஒருவருமான கே.வசந்தகுமார், பிகேஆர் வேட்பாளராக தாப்பாவில் நிறுத்தப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் நடப்பு தாப்பா வேட்பாளரும் துணை அமைச்சருமான டத்தோ சரவணன் கடுமையான போட்டியை எதிர்நோக்குவார் எனத் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த ஐந்தாண்டுகளில் அவர் தாப்பா தொகுதியில் திருப்திகரமான முறையில் சேவை வழங்கி வந்திருந்தாலும், வசந்தகுமார் நின்றால் நிலைமைகள் தலைகீழாக மாறும் எனலாம்.

வசந்தகுமார் ஹிண்ட்ராப் போராட்டவாதியாக இருப்பதாலும் – ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்த அவரது தியாகத்தையும் கருத்தில் கொண்டு  இந்திய வாக்காளர்களின் அனுதாபம் வசந்தகுமார் மீது திரும்பும்.

ஹிண்ட்ராப் ஆதரவாளர்களும் தாப்பாவில் மையமிட்டு வசந்தகுமார் வெற்றி பெற கடுமையாகப் பாடுபடுவார்கள்.

அதே வேளையில், பொதுத் தேர்தலுக்குப் பின் தேசிய முன்னணி வலுக்கட்டாயமாக பேராக் மாநிலத்தை கைப்பற்றிய காரணத்தால் பேராக் மாநிலம் முழுவதும் தேசிய முன்னணிக்கு எதிரான எதிர்ப்பு அலை எதிர்வரும் பொதுத் தேர்தலில் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Saravanan-Sliderஇத்தகைய எதிர்ப்பு அலை காரணமாக, பேராக் மாநிலத் தொகுதியான தாப்பாவிலும் பெருவாரியான வாக்காளர்கள் தேசிய முன்னணியை எதிர்த்து வாக்களிக்கும் சூழ்நிலை நிலவுகின்றது.

இதுவும் வசந்தகுமாருக்கு சாதகமான வாய்ப்பாக மாறும்.

அதே வேளையில், தாப்பாவிலும் கேமரன் மலையிலும் பூர்வகுடி வாக்காளர்கள் அதிகமாக இருப்பதால் தாப்பா தொகுதி ஒன்றின் சட்டமன்ற உறுப்பினராக பிகேஆர் கட்சி சார்பாக பூர்வ குடி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் பிகேஆர் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் மூலம் தாப்பா, கேமரன் மலைத் தொகுதிகளில் பூர்வ குடியினரைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக நிறுத்தப்படும் பட்சத்தில் அவர்களால் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக பூர்வ குடி வாக்குகளை திசை திருப்ப முடியும் என மக்கள் கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.