Home நாடு மகாதீரும் அன்வாரும் பேசியது என்ன?

மகாதீரும் அன்வாரும் பேசியது என்ன?

942
0
SHARE
Ad
அன்வார்-மகாதீர் இடையிலான ஆகஸ்ட் 10 சந்திப்பு

புத்ரா ஜெயா – கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) நண்பகல் தொழுகைக்குப் பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் அலுவலகம் சென்று துன் மகாதீரைச் சந்தித்தது, மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பல அம்சங்களில் அன்றைய நாள் ஒரு மிக முக்கியமான நாளாகும். பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி அவற்றை 100 நாட்களில் முடித்துத் தருவோம் என உறுதி வழங்கியது பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி. இன்னும் சில நாட்களில் அந்த 100 நாட்களை வெற்றிகரமாகக் கடக்கப் போகும் தருணத்தில் அன்வார் மகாதீரைச் சந்தித்திருக்கிறார்.

அவரது சந்திப்புக்கான மற்றொரு முக்கியக் காரணம் ஆகஸ்ட் 10-ஆம் தேதிதான் அன்வாரின் 71-வது பிறந்த நாளாகும். அதற்காக வாழ்த்துகளையும் துன் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களை தொடர்ந்து சிக்கலில்லாமல் பின்வாங்காமல் செய்து முடிக்க வலியுறுத்துவதற்காக பிரதமரைச் சந்தித்ததாக அன்வார் கூறியிருக்கிறார்.

ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக மற்றொரு முக்கியக் காரணம்தான் அவர்களுக்கு இடையிலான சந்திப்புக்கான நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.

மகாதீரையும், அஸ்மின் அலியையும் இணைத்து அன்வார் கடுமையாகச் சாடியிருக்கும் ஒலிப் பேழை ஒன்று சில நாட்களுக்கு முன்னால் பகிரங்கமாக எல்லாக ஊடகங்களிலும் பகிரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்காத்தான் கூட்டணியின் அடிமட்ட வட்டாரங்களில் மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையில் கடுமையான பிளவு ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் உலவத் தொடங்கின. இத்தகைய வதந்திகள் வளர்வதற்கும் பரவுவதற்கும் மேலும் இடம் தரக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இருவரும் சந்தித்தது மனம்விட்டுப் பேசினர் என்றும் சில வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

சர்ச்சைக்குரிய அந்த ஒலிப் பேழை வெளியான பின்னர், பிகேஆர் உட்கட்சி விவகாரத்தில் தான் தலையிடவில்லை என்று மகாதீர் அறிவித்தார். அதே வேளையில் அன்வாரும் அந்தக் குரல் தன்னுடையதல்ல என்றும் தான் அதுபோன்ற வார்த்தைகளை உபயோகிப்பதில்லை என்றும் மறுத்திருந்தார்.