Home உலகம் கஷோகி கொல்லப்பட்டிருந்தால் சவுதிக்கு எதிராக கடும் நடவடிக்கை – டிரம்ப் எச்சரிக்கை!

கஷோகி கொல்லப்பட்டிருந்தால் சவுதிக்கு எதிராக கடும் நடவடிக்கை – டிரம்ப் எச்சரிக்கை!

876
0
SHARE
Ad

வாஷிங்கடன் – சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்தில் கொல்லப்பட்டது உண்மையென நிரூபணமானால் சவுதி அரேபியா மீது கடும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதும் நிருபரும் சவுதி அரேபியாவுக்கு எதிராக எப்போதும் எழுதி வந்திருப்பவருமான ஜமால் கஷோகி காணாமல் போனது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து அதன் ஆழம் வரை சென்று ஆராய்வோம் என்றும் சவுதி அரசாங்கம் அவரைக் கொல்வதற்கு உத்தரவிட்டிருந்தால், தனது நிர்வாகம் மிகவும் ஆத்திரம் அடையும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

துருக்கியில் அட்னான் கஷோகி இருந்தபோது, தனது துருக்கியக் காதலியை மணப்பது குறித்த ஆவணங்களைப் பெறுவதற்காக கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் அவர் நுழைந்தார். அவர் அந்தத் தூதரகத்தில் நுழைந்ததற்கான ஆதாரமாக புகைப்படங்கள் இருக்கின்றனவே தவிர இதுவரையில் அவர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இதுவரையில் அவர் அந்தத் தூதரகத்தில் இருந்து வெளியே வரவில்லை.

உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் அவர் என்ன ஆனார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றன. உள்ளே கைகலப்புகள் நிகழ்ந்ததாகவும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்படுகின்றன.