Home நாடு இந்து இளைஞர் பேரவையின் 53ஆம் ஆண்டுப் பேராளர் மாநாடும் 70ஆம் ஆண்டு நிறைச்சின்னம் வெளியீடும்

இந்து இளைஞர் பேரவையின் 53ஆம் ஆண்டுப் பேராளர் மாநாடும் 70ஆம் ஆண்டு நிறைச்சின்னம் வெளியீடும்

1117
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய இந்து இளைஞர் பேரவையின் 53ஆம் ஆண்டு பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 23-ஆம் தேதி புத்ராஜெயா நீர், நில, இயற்கை வள அமைச்சின் பைடுரி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்து இளைஞர்களை ஒன்றிணைத்துத் தற்கால நிகழ்வுகளையொட்டி அவர்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த தளமாக இம்மாநாடு அமைந்தது.

மலேசிய இந்து இளைஞர் பேரவையின் 2018-2020 தவணைக்கான தேசியத் தலைவராக அருண்குமார் செங்கோடன் மீண்டும் தேர்வுப் பெற்ற வேளையில் அடுத்த தவணைக்கான செயற்குழுவையும் அவர் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘இயக்கங்களை வலுப்படுத்துதல் மூலம் இளம் தலைவர்களை உருவாக்குதல்’ எனும் குறிக்கோளை முன்னிறுத்தியே இந்து இளைஞர் பேரவை தொடர்ந்து செயல்படும் எனக் கூறினார்.

இந்து இளைஞர்களின் அடிப்படை பிரச்சனைகளின் பக்கம் கவனம் செலுத்துவது, அவர்களுக்கும் இந்து இளைஞர் பேரவைக்குமான உறவை வலுப்பெறச் செய்வதோடு அவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண இளம் தலைவர்களையும் தயார் செய்யும் என அருண்குமார் தனது கொள்கை உரையில் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இம்மாநாடு நடைபெற இடம் வழங்கிய நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமாருக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இம்மாநாட்டினை இந்து இளைஞர் பேரவையின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான டத்தோ வைத்தியலிங்கம் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள் தற்காலச் சவால்களைத் திறம்பட கையாண்டு இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் எனக் கூறினார். மேலும், இந்து இளைஞர் பேரவையின் தலைவர்கள் தொடர்ந்து தன்னலமற்ற சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மலேசிய இளைஞர் பேரவையின் தேசியத் தலைவர் ஜூவிட்ரி ஜோஹா இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், மலேசிய இளைஞர் பேரவை எப்போதும் இந்து இளைஞர்களின் தேவைகளிலும் அவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தி வருவதாகவும், இந்து இளைஞர் பேரவை முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

இம்மாநாட்டின் முத்தாய்ப்பு அங்கமாக இந்து இளைஞர் பேரவையின் 70ஆம் அண்டு நினைவுச் சின்னம் வெளியீடு கண்டது. இவ்வரலாற்றுப்பூர்வ சின்னத்தினை இந்து இளைஞர் பேரவையின் முதன்மை தோற்றுனர்களான ரத்ன ஸ்ரீ பாலசுந்தரம், ரத்ன ஸ்ரீ சண்முகநாதன், ரத்ன ஸ்ரீ குமரகுலசிங்கம் ஆகியோர் வெளியிட்டனர். நாடு முழுவதிலிருந்து 300 பேராளர்கள் கலந்து கொண்ட இம்மாநாடு தேநீர் உபசரிப்புடன் மாலை 5.30 மணியளவில் நிறைவுற்றது.