SHARE
Ad

சென்னை – நேற்று சனிக்கிழமை (27 ஜூலை) இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவரான சேரன் காப்பற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த வாரமும் ஆறுபேர் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட சக பங்கேற்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

சேரன், மீரா மிதுன், சரவணன், அபிராமி, கவின், சாக்‌ஷி அகர்வால் ஆகியோரே வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட அந்த அறுவராவர்.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், மீரா மிதுன் சேரன் குறித்து எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகளை விவாதித்தார். இந்த வார நிகழ்ச்சிகளில் சேரன் பின்னால் இருந்து தகாத முறையிலும் தொடக்கூடாத வகையிலும் தன்னைத் தொட்டு இழுத்ததாக குறை கூறியதோடு, எவ்வாறு அவர் தன்னைத் தொட்டார் என்பதை சாண்டியிடமும் விவரித்துக் காட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து உண்மையில் என்ன நடந்தது என்பதை குறும்படமாக போட்டுக் காட்டினார் கமல். அந்தக் குறும்படத்தைப் பார்க்கும்போது சேரன் முறைதவறி நடக்கவில்லை என்பது தெளிவாகக் காணொளி வழி அனைவருக்கும் தெரிந்தது.

இருந்தாலும் மீரா உண்மை வெளிவரும் என தொடர்ந்து தனது குற்றச்சாட்டுகளைத் தற்காத்தார்.

சேரனோ கண்கலங்கி கமலுக்கு நன்றி தெரிவித்தார். “நான் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தை. எனது நடத்தைதான் எனது குழந்தைகளுக்கு அடையாளம். நாளை அவர்களுக்கு நான் மாப்பிள்ளை பார்த்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? உங்கள் முகத்தை எப்படிப் பார்ப்பது என நான் கலங்கிக் கொண்டிருந்தேன். அது மட்டுமல்ல இன்று எனது மனைவியின் பிறந்த நாள். அவர் இந்த சம்பவத்தை எப்படிப் பார்ப்பார் என்பது குறித்தும் கவலைப்பட்டேன். ஆனால், எனது கவலையைப் போக்கி நிலைமையைத் தெளிவாக விளக்கி விட்டீர்கள்” என்று கலங்கியவாறு கூறினார்.

அதைத் தொடர்ந்து வெளியேற்றப்படவிருக்கும் அறுவரில் காப்பாற்றப்படும் ஒருவர் சேரன் என்பதை கமல் அறிவித்தார்.

எஞ்சிய ஐவரில் வெளியேற்றப்படும் ஒருவர் யார் என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.