Home One Line P1 ‘நான் ஒருபோதும் இலஞ்சம் பெறவில்லை’- குவான் எங்

‘நான் ஒருபோதும் இலஞ்சம் பெறவில்லை’- குவான் எங்

431
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று பினாங்கில் 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடலடி சுரங்கப்பாதை திட்டம் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்ட பின்னர், முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தாம் ஒருபோதும் இலஞ்சம் பெறவில்லை என்று வலியுறுத்தினார்.

“நான் ஒருபோதும் இலஞ்சம் பெறவில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

“இதை எம்ஏசிசி (என்னிடம்) கேட்கவில்லை.

#TamilSchoolmychoice

“எம்ஏசிசி எனது இலஞ்சத்தை எங்கே என்று கேட்கவில்லை. பணமாகவோ இருக்கிறதா, அல்லது எனது வங்கிக் கணக்கில் இருக்கிறதா, இது குறித்து கேட்கவில்லை. மில்லியன் கணக்கான, பில்லியன் கணக்கான ரிங்கிட் குறித்து கேட்கவில்லை

“அப்படியானால் ஊழல் எங்கே?” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவர் கூறினார். வெறுமனே அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க இது மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“ஊழல் குற்றச்சாட்டை நான் எதிர்ப்பேன். இது அரசியல் ரீதியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆதாரமற்றது, நாடாளுமன்ற உறுப்பினராக எனது நற்பெயரை களங்கப்படுத்துகிறது.

“நான் நிரபராதி என்பதை நிரூபிக்க இந்த விவகாரத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, ஜசெக பொதுச்செயலாளர் தாம் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றத்தில் தெரிவித்து, விசாரணைக் கோரினார்.

பினாங்கில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை செயல்படுத்த, ஒரு நிறுவனத்தை நியமிக்க உதவியதற்காக இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

குற்றச்சாட்டின் படி, லிம், பினாங்கு முதல்வராக இருந்த காலத்தில், டத்தோ சாருல் அகமட் முகமட் சுல்கிப்லி பெற வேண்டிய இலாபத்தில் இருந்து, 10 விழுக்காடு மதிப்புள்ள வெகுமதியை இலஞ்சமாகக் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பினாங்கு நகரில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை மேற்கொள்ள சாருலுக்கு சொந்தமான நிறுவனங்களை நியமிக்க உதவிதற்கு ஒரு ஊதியமாக இந்த தொகைப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2011 மார்ச் மாதம் மிட் வெலி சிட்டியின் சைட் புத்ரா வட்டம், தி கார்டன்ஸ் தங்கும் விடுதி அருகே பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் இந்த குற்றத்தினை செய்ததாகக் கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009- இன் பிரிவு 16 – இன் படி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. அதே சட்டத்தின் பிரிவு 24-இன் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலஞ்சம் பெற்ற மதிப்பை விட ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

ஊழல் தொடர்பான குற்றத்தை மறுத்ததை அடுத்து, அவருக்கு இருவர் உத்தரவாதத்துடன் நீதிபதி ஒரு மில்லியன் ரிங்கிட் பிணை வழங்கினார்.

மேலும், அவரது அனைத்துலக கடப்பிதழ்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி அசுரா அல்வி உத்தரவிட்டார்.