Home One Line P1 நீர் விநியோகம்: 90 விழுக்காடு முழுமையாக மீட்டமைக்கப்பட்டது

நீர் விநியோகம்: 90 விழுக்காடு முழுமையாக மீட்டமைக்கப்பட்டது

605
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி 90 விழுக்காடு இடங்களில் நீர் விநியோகம் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 1,292 இடங்களில் சுமார் 1,156 இடங்களில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பி உள்ளது.

மீதமுள்ள 136 இடங்களுக்கு நீர் விநியோகம் இன்னும் மீட்கும் பணியில் உள்ளது என்று பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பெட்டாலிங் 95.72 விழுக்காடு, கோம்பாக் 94.89 விழுக்காடு, கோலாலம்பூர் 85.02 விழுக்காடு மற்றும் கிள்ளான் / ஷா ஆலாமில் 59.32 விழுக்காடு பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலு சிலாங்கூர், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூரில் 100 விழுக்காடு நீர் விநியோகம் மீட்டெடுத்துள்ளதாகவும் ஆயர் சிலாங்கூர் நிறுவன தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கைகள் சீராக தொடர முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தண்ணீரை அதிகமாக சேமித்து வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று பயனீட்டாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

அண்மையில்,  சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த நான்கு தொழிற்சாலைகளின் மேலாளர்கள் (மானேஜர்) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

50 முதல் 60 வயதுவரையிலான அந்த நால்வரும் வியாழக்கிழமை வரை தடுப்புக் காவலில் விசாரிக்கப்படுவர். அந்த நால்வரும் சகோதரர்களாவர்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அசுத்தமான எண்ணெய்க் கழிவுகளால் நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் தங்களின் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக சேவைகளை வியாழக்கிழமை (செப்டம்பர் 3) முதல் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதன் காரணமாக, சிலாங்கூரின் 1,292 பகுதிகளில் உள்ள சுமார் 1.2 மில்லியன் இல்லங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று இது குறித்துக் கருத்துரைத்த சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைதான் தூய்மைக் கேட்டுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டார். அந்தத் தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டதாகவும்,  அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.