Home One Line P1 வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்

வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவோரை அபராதம் செலுத்த அனுமதிக்க வேண்டும்

673
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வாகனம் ஓட்டும்போது கைபேசிகளைப் பயன்படுத்துபவர்களை அபராதங்களைச் செலுத்த அமலாக்கப்பிரிவு அனுமதிக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார்.

குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அபராதம் செலுத்த அனுமதிக்கும் நடைமுறைக்கு திரும்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

காவல் நிலையங்களில் அபராதம் செலுத்த குற்றவாளிகள் அனுமதிக்கப்பட்டால் நிறைய நேரம், வளங்களை மிச்சப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

“அமலாக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடுவது அவர்களின் சம்மன் தீர்ப்பதற்கு மிகவும் கடுமையானது, மேலும் தேவையற்ற கஷ்டங்களை ஏற்படுத்துகிறது, ” என்று அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்ற அபராதம் செலுத்துவது பலருக்கு கடினமாக இருக்கலாம், சிறையில் அடைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, செலுத்த வேண்டிய அதிகபட்ச அபராதம் 300 ரிங்கிட் ஆகும்.

மோசமான ஓட்டுநர் அணுகுமுறை, சோர்வு மற்றும் வாகனம் ஓட்டும் போது கைபேசிகளைப் பயன்படுத்துவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக காவல் துறை அடையாளம் கண்டுள்ளது.

மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில், மலேசிய ஓட்டுநர்கள் தங்கள் கைபேசிகளை சாலையில், குறிப்பாக போக்குவரத்து சமிக்ஞை விளக்கு, போக்குவரத்து நெரிசல்களில் பயன்படுத்த விரும்புவதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், நேற்று, இதே போன்ற சாலைக் குற்றங்கள் விவகாரமாகப் பேசிய போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங், திருத்தப்பட்ட சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு கடுமையான அபராதம் விதிக்க எந்தவொரு காலத் தாமதமும் இனி தேவைப்படாது என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த வாரம் இது மேலவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

“பொதுமக்களை எச்சரிக்கவும், அறிவுறுத்தவும் எங்களுக்கு போதுமான நேரம் இருந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியிருந்தார்.

அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான அபராதங்கள் மக்களை குற்றம் செய்வதிலிருந்து தடுக்க போதுமானதாக இருக்கும் என்று வீ கூறினார்.

இந்த சட்டம் மது அருந்த விரும்பும் நபர்களின் உரிமைகளை பறிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றாரவர்.

“நீங்கள் குடிக்கலாம். ஆனால் நீங்கள் குடித்தவுடன், வாகனம் ஓட்ட வேண்டாம் ” என்று அவர் கூறினார்.

இலஞ்சம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிப்பதை அவர் எச்சரித்தார். குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்களுக்கு இரட்டை தண்டனைகள் வழங்கப்படும்.

“சட்ட அமலாக்கம் இதை சமாளிக்கட்டும். இதிலிருந்து மக்கள் தப்பிக்க முயன்றால், அவர்களுக்கு இரண்டு தண்டனைகள் காத்திருக்கும், ” என்று அவர் கூறினார்.

மக்களவை சமீபத்தில் சாலை போக்குவரத்து (திருத்த) மசோதா 2020- ஐ நிறைவேற்றியது. இது மது அல்லது போதைப்பொருள் தாக்கத்தின் கீழ் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதற்கும் அபராதத்தை அதிகரித்தது.

வாகனம் ஓட்டும்போது மரணத்தை ஏற்படுத்தியவர்கள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு 50,000 முதல் 100,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும்.

முதல் முறை குற்றவாளிகளுக்கான குறைந்தபட்ச அபராதம் 5,000 இலிருந்து 20,000 ரிங்கிட்டாகவும், அதிகபட்ச அபராதம் 20,000 இலிருந்து 50,000 ரிங்கிட்டாகவும் உயர்த்தப்படும்.

முதல் முறை குற்றவாளிகள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். அதிகபட்ச சிறைத் தண்டனை 10 ஆண்டுகள் ஆகும்.

முதல் முறை குற்றவாளிகள் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அடுத்தடுத்த குற்றங்களுக்கு, அபராதம் 10 ஆண்டுகளாக இரட்டிப்பாகும்.