Home One Line P1 அம்னோ-பெர்சாத்து உறவு: பாஸ் தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது

அம்னோ-பெர்சாத்து உறவு: பாஸ் தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது

408
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க பாஸ் தலைமை இன்று கூடியுள்ளது. குறிப்பாக பெர்சாத்துவுடனான அம்னோவின் உறவை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும்.

கோலாலம்பூர் ஜாலான் ராஜா லாவுட்டில் கட்சியின் தலைமையகத்திற்கு முக்கிய பாஸ் தலைவர்கள் வருகைப் புரிந்தனர். சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

கூட்டத்திற்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தலைமை தாங்கினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், பாஸ் மத்திய குழு உறுப்பினர் நிக் முகமட் அப்து, கட்சி தலைமையகத்திலிருந்து காலை 10.30 மணிக்கு வெளியேறினார்.

நேற்று, பாஸ் மத்திய பொருளாளர் இஸ்காண்டார், 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான உறவுகளைத் துண்டிக்கும் தீர்மானம் குறித்து அம்னோ எடுத்த முடிவு குறித்து, கட்சி இன்று விவாதிக்கும் என்று கூறியிருந்தார்.

இதனிடையே, நேற்று, பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை அம்னோ முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற ஊகங்கள் இருந்தபோதிலும், தேசிய கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையாது என்று அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருந்தார்.

இந்த உறவு மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

“நாங்கள் தேசிய கூட்டணியை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். மேலும் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பு குறித்து அம்னோ இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை,” என்று அவர் கூறியிருந்தார்.

பெர்சாத்து உடன் ஒத்துழைப்பைத் தொடரலாமா அல்லது நேர்மாறாக இருக்க வேண்டுமா என்று தீர்மானிக்க அம்னோ உச்சமன்ற குழு ஜனவரி 31 அன்று ஒரு பொதுக் கூட்டம் நடத்துகிறது.

மக்களவையில் தேசிய கூட்டணி மிகவும் பலவீனமான பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. பெர்சாத்து மற்றும் அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற அம்னோ எடுக்கும் எந்தவொரு முடிவும் பொதுத் தேர்தலுக்கான வாய்ப்பைத் தூண்டும்.