Home உலகம் உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்: வரலாற்றுப் பின்னணி – சுதந்திர உக்ரேனின் பிரச்சனைகளும் – ஆதிக்கம் செலுத்த...

உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்: வரலாற்றுப் பின்னணி – சுதந்திர உக்ரேனின் பிரச்சனைகளும் – ஆதிக்கம் செலுத்த நினைக்கும் விளாடிமிர் புடினும் (பகுதி 2)

566
0
SHARE
Ad
நாட்டு மக்களிடம் போர் குறித்து உரையாற்றிய உக்ரேனிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி

(உக்ரேன்– ரஷ்யா இடையிலான போர் தொடங்கி கடந்த 6 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் என்ன? வரலாற்றுப் பின்னணிகள் என்ன? தனது பார்வையில் விவரிக்கிறார் இரா.முத்தரசன். இந்தக் கட்டுரையின் முதல் பகுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) செல்லியலில் இடம் பெற்றது)

சுதந்திர உக்ரேனின் பிரச்சனைகளும் – ஆதிக்கம் செலுத்த நினைக்கும் விளாடிமிர் புடினும்

  • 1991இல் சுதந்திரம் பெற்றும் உள்நாட்டுக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட உக்ரேன்
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன் இணைவதற்கு ரஷியா போட்ட முட்டுக் கட்டைகள்
  • உக்ரேனை ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புடின்

உக்ரேன் புதிய நாடு உதயம்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ரஷியா தன்னைச் சுற்றியிருந்த நாடுகளையும் பிரதேசங்களையும் தனது இராணுவ பலத்தின் துணையோடும், கம்யூனிச நாடு என்ற அதிகாரத்தோடும் இணைத்துக் கொண்டது.

இவை எல்லாம் தனித்தனி நாடுகள். அங்கு பேசப்பட்டவை வேறு வேறு தனி மொழிகள். கலாச்சாரங்களும் வேறுபட்டவை. ஆனால் அந்த நாடுகள் அனைத்தும் சோவியத் ரஷியாவின் அங்கமாகவே – அதன் ஒரு பகுதியாகவே – அந்நாளில் பார்க்கப்பட்டன.

#TamilSchoolmychoice

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் உக்ரேன், கசக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் என்றெல்லாம் தனித்தனி பெயர்களுடன் நாடுகள் இருந்ததில்லை. அனைத்தும் சோவியத் ரஷியா என்ற மாபெரும் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டன. அவற்றின் சுய அடையாளங்கள் முடக்கப்பட்டன.


உக்ரேன்– சில தரவுகள்

  • சுதந்திரம் பெற்ற ஆண்டு: 1991
  • நடப்பு அதிபர்: வோலோடிமிர் செலென்ஸ்கி
  • நடப்புப் பிரதமர்: டெனிஸ் ஷெம்யால்
  • மொத்தப் பரப்பரளவு: 603,550 சதுர கிலோ மீட்டர்
  • கனிம வளங்கள் நிறைந்த நாடு
  • முக்கியத் தொழில் துறைகள்: நிலக்கரி, மின்சக்தி உற்பத்தி, கனிமங்கள் தொடர்பான தொழில்கள்
  • விவசாய உற்பத்தி: சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு, சூரியகாந்தி விதைகள், பார்லி, சோயாபீன்ஸ், பால்வளப் பொருட்கள்
  • மக்கள் தொகை: 43.7 மில்லியன் (ஜூலை 2021 கணக்கெடுப்பு)
  • இனவாரியான பிரிவினர்: உக்ரேனியன் 77.8%, ரஷ்யன் 17.3%, மற்றவர்கள் 4.9%.
  • அதிகாரத்துவ மொழி: உக்ரேனியன்; சில பிரதேசங்களில் ரஷ்ய மொழி.
  • மதம்: பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவர்கள்

1990ஆம் ஆண்டுகளில் ரஷியாவின் அதிபராகப் பொறுப்பேற்ற மிக்கேல் கொர்பசேவ், அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் ஆகியோரின் சமாதானப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான ‘கோல்ட் வார்’ (cold war) என்று அழைக்கப்பட்ட மறைமுகப் பனிப்போர் ஒரு முடிவுக்கு வந்தது.

இதுதான் சமயம் என்று ரஷியாவின் பிடியிலிருந்தும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக விடுதலை பெற்றன. பத்துக்கும் மேற்பட்ட புதிய நாடுகள் உதயமாகின. உலக வரைபடங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உறுப்பிய நாடுகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

அவ்வாறு 16 ஜூலை 1990ஆம் தேதி, ரஷியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனி சுதந்திர நாடாக உதயமானதுதான் உக்ரேன்.

புடின் வருகையால் அரசியல் மாற்றம் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த நாடுகள்

ரஷிய அதிபர் – விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின் ரஷிய அதிபராக வந்த பின்னர் மீண்டும் மெல்ல மெல்ல ரஷியாவின் ஆதிக்கத்தை அண்டை நாடுகளின் மீது செலுத்த ஆரம்பித்தார்.

ஏராளமான இயற்கை வளங்களையும், விவசாயத் துறையில் வளமான உற்பத்திகளையும் கொண்டிருந்த பெரிய நாடான உக்ரேனையும் ரஷியாவின் பொருளாதாரப் பிடிக்குள் வைத்திருக்க புடின் விரும்பினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே மிகப் பெரிய நிலப் பிரதேசத்தைக் கொண்டிருக்கும் நாடு உக்ரேன் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ உடையில் விளாடிமிர் செலன்ஸ்கி (கோப்புப் படம்)

புடினுக்குப் பொருத்தமாக, ரஷியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேண விரும்பிய விக்டர் யானுகோவிச் – Victor Yanukovych – 2010ஆம் ஆண்டில் உக்ரேனின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஷிய ஆதரவோடு, மோசடிகள் செய்துதான் அவர் அதிபரானார் என்ற குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன.

1990-ஆம் ஆண்டுகளில் சோவியத் ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாடுகளில் சில ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து விட்டன – அல்லது இணைவதற்கான முன்னேற்பாடுகளைச் அந்தக் காலகட்டத்தில் செய்து வந்தன.

இஇசி (EEC-European Economic Community) என்னும் ஐரோப்பிய ஒன்றியம் என்பது 1957-இல் அமைக்கப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் ஆகும்.

உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை விரும்பாத ரஷிய அதிபர் புடின், ரஷிய சார்பு உக்ரேன் அதிபரான யானுகோவிச் மூலம் காய்களை நகர்த்த ஆரம்பித்தார். சில முட்டுக்கட்டைகளைப் போட்டார்.

முதல் கட்டமாக நவம்பர் 2013இல் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார உடன்பாட்டையும், சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளையும் யானுகோவிச் முறித்துக் கொண்டார்.

ஆனால் இதனை உக்ரேன் மக்கள் விரும்பவில்லை. நீண்ட காலமாக ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்த காரணத்தால் ஏழ்மையை மட்டுமே கண்டிருந்த உக்ரேன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே விரும்பினர். அதன் மூலம்தான் தங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றும் நம்பினர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார உடன்பாட்டை உக்ரேன் முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து ரஷியா, உக்ரேனுக்கு 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார உதவிகளை வழங்க முன்வந்தது.

அதோடு, உக்ரேனில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்த மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும் – ஒழிக்கவும் – ரஷியா நெருக்குதல் கொடுக்கத் தொடங்கியிருந்தது.

கடுமையான சட்டங்களால் வெடித்த மக்கள் ஆர்ப்பாட்டங்கள்

2014-ஆம் ஆண்டு ஜனவரியில், மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட சட்டங்களை நாடாளுமன்றத்தில் யானுகோவிச் அரசாங்கம் அங்கீகரித்தது.

மக்களிடையே உறங்கிக் கிடந்த போராட்டக் கனலை எதிர்க்கட்சிகளும் ஊதிவிட, (2014) பிப்ரவரி 18ஆம் தேதி முதல், இதனால் வீதி ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கிலும் வெடித்தன.

உக்ரேனின் தலைநகரான கீவ் (Kiev) நகரில் நிகழ்ந்த கலவரங்களால் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

மக்களின் நியாயமான போராட்டத்தின் வீரியத்தையும், அதில் பொதிந்திருந்த நேர்மையையும் அரசாங்கத் துருப்புகளும் உணர்ந்து கொண்டன. மெல்ல மெல்ல பின்வாங்கத் தொடங்கின.

எதிர்க்கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் யானுகோவிச்சுக்கு எதிராக களத்தில் தீவிரமாக இறங்க, பிப்ரவரி 22ஆம் தேதி யானுகோவிச்சை அதிபர் பதவியிலிருந்து உக்ரேன் நாடாளுமன்றம் அகற்றியது.

அதனைத் தொடர்ந்து யானுகோவிச் தன் உயிருக்கு ஆபத்து என அறிவித்து விட்டு குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறி ரஷிய அதிபர் புடினின் ஆதரவோடு ரஷியாவில் அரசியல் தஞ்சமடைந்துவிட்டார்.

புதிய அதிபர் – பெட்ரோ போரொஷெங்கோ

ரஷியா ஆதரவு அதிபர் யானுகோவிச் நாட்டை விட்டு வெளியேறியதும் (2014) மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெட்ரோ போரொஷெங்கோ உக்ரேனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது என்ற பிரச்சாரத்தை முன்வைத்துத்தான் பெட்ரோ போரொஷெங்கோ அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில் தனக்கு நெருக்கமான அதிபராகத் திகழ்ந்த யானுகோவிச் வீழ்த்தப்பட்டு நாட்டை விட்டே வெளியேறியதால் ஆத்திரம் கொண்டார் புடின். பழிவாங்க நினைத்தார்.

கிரிமியா விவகாரத்தைக் கையிலெடுத்தார் புடின்.

கிரிமியா எந்த நாட்டைச் சேர்ந்த பிரதேசம்?

அதன் மீது ரஷியாவுக்கு ஏன் அக்கறை?

எவ்வாறு அந்தப் பிரதேசத்தை ரஷியா ஆக்கிரமிப்பு செய்ய முடிந்தது?

கட்டுரையின் அடுத்த 3-ஆம் பகுதியில் பார்ப்போம்!

-இரா.முத்தரசன்

அடுத்து :

உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்: வரலாற்றுப் பின்னணி என்ன? (பகுதி 3)

தொடர்புடைய முந்தைய கட்டுரை :

உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்; வரலாற்றுப் பின்னணி என்ன? (பகுதி 1)

உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்; வரலாற்றுப் பின்னணி என்ன? (பகுதி 1)