Home நாடு டத்தோஸ்ரீ எம்.சரவணன் பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

டத்தோஸ்ரீ எம்.சரவணன் பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

367
0
SHARE
Ad

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் பொங்கல் – தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டைக்கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தை மாதத்தில் உழவர்களால், தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கலானது, தமிழர் திருநாள் மட்டுமல்ல இயற்கைக்கு நன்றி சொல்லும் பெருநாளாகும். “பழையன கழிதலும், புதியன புகுதலும்”, பொங்கல் கொண்டாட்டத்தில் முதன்மையானது.

நான்கு நாள் கொண்டாடப்படும் பொங்கலில், பழைய குப்பைகளை மட்டுமன்றி, பழிக்கத்தக்க குணங்களையும், செயல்களையும் நீக்கி; போற்றுதற்குரிய குணங்களையும், செயல்களையும் ஏற்போம் எனும் தத்துவத்தோடு தொடங்குகிறது “போகிப்பண்டிகை”.

#TamilSchoolmychoice

தை முதல்நாள் சூரியனுக்காகப் பொங்கல், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மகிழ்ச்சி பொங்க, இல்லத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவோம்.

தைமாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டை வரவேற்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் பொங்கலோடு கலந்த இனிய புத்தாண்டாக இது மலரட்டும். பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

உழைக்க நாம் தயாராக இருக்கும் வரை நமக்குத் தோல்வி என்பதில்லை. பிறரிடம் கையேந்தி வாழ்வதைவிட நாம் உழைத்து வாழ்வதே மேல். உழைக்கும் வர்க்கம் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. “திரைகடல்  ஓடியும் திரவியம் தேடு” என நம் முன்னோர்கள் உழைப்பையும், பிழைப்பையும் தேடி கடல் கடந்து சென்றதால்தான் இன்று உலகம் முழுதும் இந்தியர்கள் வாழ்கிறார்கள்.

“வாழ நினைத்தால்வாழலாம் வழியா இல்லை பூமியில்..” உழைப்பை முன்னிலைப் படுத்தி வாழ்வைக் கட்டமைத்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால்தான் விவசாயிகள் உழைத்து, தங்களது உழைப்பை அறுவடை செய்யும் நாளைக் கொண்டாடக் கற்றுக்கொடுத்தார்கள். அதுவே பொங்கலாக இன்று உலகம் முழுவதும் நாம் கொண்டாடி வருகிறோம்.

எங்கெங்கோ இருந்து இங்கு வந்து பலரும் வாழ்கிறார்கள், வாழ்வாதாரத்தைப் பெருக்குகிறார்கள். நமக்கு மட்டும் வழி இல்லாமலா போய் விடும்.

ஆக எத்தனை இன்னல் வந்தாலும் இந்தப் புத்தாண்டில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்வோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். ஒற்றுமையாகக் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.