இந்த மாநாட்டில் தேசியத் தலைவரின் கொள்கை உரையோடு, வழக்கமான ஆண்டறிக்கை, கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பேராளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேசியத் தலைவரின் சகோதரர் மறைவால்…
தேசியத் தலைவர் விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் டத்தோ பாலன்குமாரனின் மறைவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமையும், இன்று சனிக்கிழமையும், கருமக்கிரியை சடங்குகள் என்பதாலும் – அதன் காரணமாக தேசியத் தலைவர் பொதுப் பேரவையில் முழு நேரம் இருக்க முடியாது என்பதாலும் – மாநாட்டை ஒத்தி வைக்கும்படி மத்திய செயலவை கேட்டுக் கொண்டதாக துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மாநாட்டில் தெரிவித்தார்.
மாநாட்டுக்கு வருகை தந்து கொள்கை உரையாற்றிய விக்னேஸ்வரன் இரவெல்லாம் கண்விழித்து கருமக்கிரியை சடங்குகளில் கலந்து கொண்டிருந்தாலும், தனது கொள்கை உரையை நிகழ்த்த வந்திருப்பதாகக் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து இடம் பெறுவதா?
அதன் பின்னர் நடைபெற்ற மாநாட்டின் பேராளர்களின் விவாதங்களில் முக்கியமாக குறிப்பிடப்பட்ட அரசியல் அம்சம் ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா தொடர வேண்டுமா? இல்லையா? என்பதுதான். வாதத்தில் கலந்து கொண்ட பேராளர் ஒருவர் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை ஆதரிப்பதா என்ற முடிவை கட்சி உறுதியோடு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அந்த ஓராண்டு கால அவகாசம் அன்வார் பிரதமராக பதவியேற்றதிலிருந்து தொடங்குகின்றதா அல்லது அவர் மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்த தேதியிலிருந்து அந்த ஓராண்டு கால அவகாசம் தொடங்குகிறதா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என சரவணன் மேலும் குறிப்பிட்டார்.
“தேசிய முன்னணியின் வழியாக ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றோம் எனினும் எங்களுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை” என சரவணன் வருத்தத்துடன் மாநாட்டில் குறிப்பிட்டார்.
உதாரணமாக மாவட்ட, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம் என்று வரும்போது – பினாங்கு மாநிலத்தில் மாநில அரசாங்கத்தை கேட்டால் – நாங்கள் தேசிய முன்னணிக்கு இடங்களை ஒதுக்கி விட்டோம் என்று கூறுகிறார்கள். அதே வேளையில் தேசிய முன்னணியை கேட்டால் இது எங்களுக்கு வழங்கப்பட்டது. இதனை எப்படி நாங்கள் பிரித்துக் கொடுப்பது என தட்டிக் கழிக்கிறார்கள் இதுபோன்று நமது கட்சிக்கு மரியாதை தராத சூழலில் நாம் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவை கண்மூடித்தனமாக தர வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டிய நிலையில் கட்சி இருப்பதாக பேராளர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சரவணன் கூறினார்.