Home இந்தியா உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 பேரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 பேரும் பத்திரமாக மீட்பு

332
0
SHARE
Ad

புதுடில்லி : உத்தரகாண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவால் மூடப்பட்ட சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களும் இன்று இரவு பத்திரமாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாராவில் நவம்பர் 12-ந் தேதி முதல் சுரங்க பாதைக்குள் இவர்கள் சிக்கியிருந்தனர். 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் பாதுகாப்பாக இன்று இரவு அவர்கள் மீட்கப்பட்டனர்.

இந்தியா முழுவதும் இந்த மீட்புப் பணிகளை நாள்தோறும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பின்பற்றி வந்தனர்.

#TamilSchoolmychoice

மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் தனித்தனியே அவசர சிகிச்சை வாகனத்தில் (ஆம்புலன்ஸில்) மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் சுரங்க பாதை குழாயில் நுழைந்து அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.

சுரங்கப் பாதையில் இருந்து தொழிலாளர்களை மீட்கும் பணி 45 நிமிடங்களிலேயே முடிவடைந்தது.

17 நாட்கள் சுரங்கப் பாதையில் சிக்கித் தவித்த போதும் தொழிலாளர்கள் உற்சாகத்துடனும் சிரித்த முகத்துடனும் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர்.

மீட்புப் பணிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றார்.