Home நாடு காவல்துறை விசாரணையில் தர்மேந்திரன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் இறந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் உறுதி

காவல்துறை விசாரணையில் தர்மேந்திரன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் இறந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் உறுதி

410
0
SHARE
Ad

N-Surendranகோலாலம்பூர், மே 23 – காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் மர்மமான முறையில் இறப்பது மலேசியாவில் தொடர் கதையாகிவிட்டது.  அந்த வகையில் நேற்றும் காவல்துறையில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன் த/பெ நாராயணசாமி மர்மமான முறையில் இறந்துள்ளார்.

கும்பல் சண்டை ஒன்றில் தான் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒத்துக் கொண்டு கடந்த மே 11 ஆம் தேதி புடு காவல்நிலையத்தில் சரணடைந்த தர்மேந்திரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எனினும் தர்மேந்திரன் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மனைவி மரியா சூசைக்கோ அல்லது பெற்றோருக்கோ தகவல் தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் தான் குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து அன்றைய தினமே குடும்பத்தினர் அனைவரும் சிறையில் தர்மேந்திரனை சந்தித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவரவேண்டிய தர்மேந்திரன், பிணமாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தர்மேந்திரனின் மனைவியைத் தொடர்பு கொண்ட ஒரு அதிகாரி, அவர் இறந்துவிட்டதாகவும், கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை அடையாளங் காணும் படியும் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற மனைவியை, தனது கணவரின் உடலைக் காண காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தர்மேந்திரன் உடலில் காயங்கள் 

இறந்த தர்மேந்திரனின் உடலில் அடித்து துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதற்கான காயங்கள் உள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பிகேஆர் உதவித்தலைவர் என்.சுரேந்திரன் (படம்) கூறுகையில், “தர்மேந்திரன் கடுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்ட அதிர்ச்சி காரணமாக அவரது உடலில் மென்மையான திசுக்கள் செயலிழந்து மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அவரது முதுகில் ரோத்தானைக் கொண்டு அடித்ததற்கான தழும்புகளும், காது மற்றும் இரண்டு கால்களின் கனுக்கால் பகுதிகளிலும் ஊசி கொண்டு குத்தியதற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும்

இதனிடையே தர்மேந்திரனின் மனைவி மரியா சூசை தனது கணவரின் திடீர் மரணம் குறித்து டாங் வாங்கி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் என் கணவரின் மரணம் இயற்கையானது அல்ல. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் காயங்கள் உள்ளன. எனவே இது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.