Home நாடு அமைச்சரவை உத்தரவை மீறி அரசு ஊழியர்கள் செயல்படுகின்றார்கள் – முஸ்லீம் அல்லாதோர் மத நல்லிணக்க ஆலோசனை...

அமைச்சரவை உத்தரவை மீறி அரசு ஊழியர்கள் செயல்படுகின்றார்கள் – முஸ்லீம் அல்லாதோர் மத நல்லிணக்க ஆலோசனை மன்றம் குறைகூறல்!

513
0
SHARE
Ad

Civil-vs-Syariah-Featureஜூன் 13 – முஸ்லீம் அல்லாதார் மத மாற்றம் பிரச்சனையில் அரசு ஊழியர்கள் அமைச்சரவை செய்த முடிவுகளுக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள மலேசிய முஸ்லீம் அல்லாதார் மத நல்லிணக்கக் குழு, இதனால் அமைச்சரவை என்பது பலமில்லாத, பல் இழந்த அமைப்பு போல் தோற்றமளிக்கின்றது என்றும் வர்ணித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பெற்றோர்கள் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் தங்களின் பிள்ளைகளை ரகசியமாக மதம் மாற்றக் கூடாது என அமைச்சரவை கடந்த ஏப்ரல் 2009ஆம் ஆண்டு முடிவு செய்தது.

இந்த முடிவு முஸ்லீம் அல்லாத மலேசியர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் செய்த முடிவா அல்லது உண்மையிலேயே இத்தகைய முடிவைச் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கின்றதா என்பது தெரியவில்லை என்றும் இந்த நல்லிணக்கக் குழு தெரிவித்துள்ளது.

பிரதமரும், அமைச்சரவையும் முடிவொன்றை செய்த பிறகு அந்த முடிவை மாற்றுவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கு அதிகாரம் இருக்கின்றதா என்றும் இந்த நல்லிணக்கக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

புத்தமதம், கிறிஸ்துவ மதம், இந்து மதம், சீக்கிய மதம், தௌயிசம் ஆகிய மதங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மத நல்லிணக்க ஆலோசனை மன்றம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அண்மையில் தனது அனுமதி இல்லாமல், குடும்பப் பிரச்சனை காரணமாக, ஐந்து மற்றும் எட்டு வயதான தனது இரண்டு குழந்தைகளை தனது கணவர் முஸ்லீம் மதத்திற்கு மதமாற்றம் செய்துள்ள விவகாரம் குறித்து நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள பெண்மணி ஒருவர் புகார் செய்திருப்பது தொடர்பில் மத நல்லிணக்கக் குழு இன்று தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

ஜெலுபுவில் உள்ள அந்த பெண்மணி தனது கணவருடன் முஸ்லீம் அல்லாதார் சட்டத்திற்குட்பட்டு திருமணம் செய்திருக்கின்றார். இருப்பினும் அவருக்குத் தெரியாமல் அவரது கணவர் அவர்களின் இரண்டு குழந்தைகளை மத மாற்றம் செய்திருக்கின்றார்.

இதுகுறித்து புகார் செய்தபோது, பெற்றோரில் இருவரில் ஒருவர் முஸ்லீமாக இருந்து அவரது சம்மதம் இருந்தால் போதுமென இஸ்லாமிய விவகார இலாகா தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டிலேயே இவ்வாறு ரகசியமாக செய்யப்படும் மத மாற்றங்களுக்கு அமைச்சரவை தடைவிதித்தது.

இதனால் அமைச்சரவை பலம் இல்லாத அமைப்பு போல தோற்றமளிக்கின்றது காரணம் அரசாங்க ஊழியர்கள் அமைச்சரவையின் முடிவை மீறி செயல்படுகின்றனர் என்றும் மத நல்லிணக்கக் குழு சுட்டிக் காட்டியுள்ளது.