Home நாடு “புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்” – அஸ்மின் அலிக்கு ஜசெக வாழ்த்து

“புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்” – அஸ்மின் அலிக்கு ஜசெக வாழ்த்து

524
0
SHARE
Ad

Tony Pua DAPகோலாலம்பூர், செப்டம்பர் 24 – சிலாங்கூரின் புதிய மந்திரிபெசாராக நியமிக்கப்பட்டுள்ள அஸ்மின் அலிக்கு அனைத்து தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவியத் தொடங்கியுள்ளன.

அரசு நிர்வாகத்தை தொழில் நிறுவனத்தைப் போன்று அவர் நடத்தக்கூடாது என அஸ்மின் அலிக்கு சிலாங்கூர் ஐசெக அறிவுறுத்தி உள்ளது. நாட்டின் வளமான மாநிலமான சிலாங்கூரை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பல்வேறு தொழில்களுக்கு ஏற்ற சூழலை இங்கு உருவாக்க வேண்டும் என்றும் ஐசெக கூறி உள்ளது.

டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் நிர்வாகத்தின் கீழ் புறக்கணிக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என சிலாங்கூர் ஐசெக தலைவர் டோனி புவா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக, வாங்கும் சக்திக்கேற்ப வீட்டுடமைத் திட்டம் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

“இலாபம் ஈட்டும் தொழில்களில் ஈடுபடுவது ஒரு அரசாங்கத்தின் வேலை அல்ல. இதை
அஸ்மின் அலி தலைமையிலான அரசாங்கம் உணர்ந்து செயல்படும் என நம்புகிறோம்.  மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் புதிய அரசு நிர்வாகம் கவனம் செலுத்தி சாதிக்கும் பட்சத்தில், சிலாங்கூரின் மிகச் சிறந்த மந்திரி பெசார் என்று வரலாற்றில் அஸ்மின் அலி இடம்பெறுவார்,” என்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் டோனி புவா (படம்) கூறியுள்ளார்.

புதிய அரசு நிர்வாகம்  வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஊழல் மற்றும் குற்றச்செயல்களைப் புரிபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

“ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலமாகவும், நாட்டிலேயே மிகச் சிறந்த
நிர்வாகம் உள்ள மாநிலம் என்ற வகையிலும், சிலாங்கூரை மிகச் சிறந்த உயரங்களுக்கு அஸ்மின் அலி இட்டுச் செல்வார் என நம்புகிறோம்,” என டோனி புவா மேலும் தெரிவித்துள்ளார்.