Home உலகம் எபோலா எதிரொலி: மேற்கு ஆப்பிரிக்கர்களுக்கு ஆஸ்திரேலிய விசா ரத்து!

எபோலா எதிரொலி: மேற்கு ஆப்பிரிக்கர்களுக்கு ஆஸ்திரேலிய விசா ரத்து!

453
0
SHARE
Ad

Ebolaசிட்னி, அக்டோபர் 29 – உலக அளவில் எபோலா நோய் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு விசா வழங்குவதை ஆஸ்திரேலிய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லியோனே, கினியா உள்ளிட்ட நாடுகளில் எபோலா நோய் அதிவேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலும் இந்நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் உயிர் கொல்லி நோயாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நோய்க்கு, இதுவரை உலக அளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் உலக நாடுகள், எபோலா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அரசு எபோலா நோய் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாட்டவருக்கு விசா வழங்குவதை ரத்து செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நாட்டினரிடம் இருந்து ஆஸ்திரேலிய குடியேற்றத்துறைக்கு வரும் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியாது என அத்துறைக்கான அமைச்சர் ஸ்காட் மாரிசன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “மேற்கு ஆப்பிரிக்க நாட்டவருக்கான தற்காலிக விசா கொள்கை ரத்து செய்யப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் எபோலா நோய்க்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. எனினும், இங்கு இந்த நோய் பற்றிய அச்சம் பரவலாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறியுள்ளார்.