கொழும்பு, ஜனவரி 11 – அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி கண்ட நிலையில், இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா வெள்ளிக்கிழமை மாலை பதவியேற்றார். இவர் இலங்கையின் ஆறாவது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் செல்வாக்குடன் விளங்கி வந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி கண்டார்.
இத்தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா 51.2 விழுக்காடு வாக்குகளையும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே 47.6 விழுக்காடு வாக்குகளையும் பெற்றனர்.
இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் எல்லாம் ராஜபக்சேவுக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. இப்பகுதிகளில் ராஜக்சேவைவிட கூடுதலான வாக்குகளை பெற்ற மைத்ரிபாலா சிறீசேனா (63 வயது) எளிதில் வெற்றி கண்டுள்ளார்.
இதையடுத்து தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை சிறீசேனா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புறுதிப் பிரமாணமும் ஏற்றுக் கொண்டார்.
ராஜபக்சேவின் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே, இதே பதவி ஏற்பு விழாவில் இலங்கையின் பிரதமராக பதவியேற்றார்.

படங்கள்: EPA