Home உலகம் தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கு 1,000 ஏக்கர் நிலம் – இலங்கை ஒப்புதல்!

தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கு 1,000 ஏக்கர் நிலம் – இலங்கை ஒப்புதல்!

420
0
SHARE
Ad

2கொழும்பு, பிப்ரவரி 14 – இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, அந்நாட்டு இராணுவம் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் 1000 ஏக்கர் நிலத்தை, இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றத்திற்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

விரைவில் அவர் இந்தியப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கில் இராணுவம் வசம் இருக்கும் தேவையற்ற நிலங்களை இடம்பெயர்ந்தவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பேன் என மைத்ரிபால சிறிசேனா தேர்தலுக்கு முன் தெரிவித்து இருந்தார்.

#TamilSchoolmychoice

தற்போது அதனை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அந்நாட்டின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியதாவது:-

“பலாலியில் இராணுவ வசம் இருந்த சுமார் 1000 ஏக்கர் நிலத்தை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றுவதற்காக வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரும் அதிபருமான சிறிசேனா முன்வைத்த இந்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது”

“அதன்படி, முதற்கட்டமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட வலவாய் கிராமத்திற்கு 220 ஏக்கர் நிலம் திரும்பி ஒப்படைக்கப்படும். 1,022 குடும்பங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு, வீடு கட்ட நிதியுதவி அளிக்கப்படும்.”

“பள்ளி, மருத்துவமனை, கோயில்கள் உள்ளிட்டவை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்படும். எஞ்சிய 780 ஏக்கர்களும் போரால் பாதிக்கப்பட்டு தமது நிலங்களை இழந்து வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.