Home நாடு முன்னாள் அமைச்சரின் சகோதரருக்கு காவல்துறை வலைவீச்சு!

முன்னாள் அமைச்சரின் சகோதரருக்கு காவல்துறை வலைவீச்சு!

553
0
SHARE
Ad

கோத்தகினபாலு, மே 8 – கூட்டரசு பிரதேச முன்னாள் அமைச்சர் ஒருவரது சகோதரர் சபா காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். ஒருவரை துப்பாக்கியால் சுட்டதற்காக அவர் தேடப்படுவது தெரியவந்துள்ளது.

மட் மலாயா என்று அழைக்கப்படும் அந்த 43 வயது ஆடவர், புதன்கிழமை மெக்கானிக் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன் முடிவில் மூன்று முறை அந்த மெக்கானிக்கின் வலது காலில் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மிக ஆபத்தானவராக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

main_0805_pu_p22_Punithas_1

#TamilSchoolmychoice

குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த நபர் கடந்த 2007ஆம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் என்றும், தற்போது நிகழ்ந்துள்ள சம்பவத்துக்குப் பின்னர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

“மட் மலாயா ஆபத்தானவர். அவர் பொதுமக்களைச் சுடுவதற்கு தயங்கமாட்டார். அவரை நேரில் கண்டாலோ அல்லது அவரது இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தாலோ, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாறாக பொதுமக்கள் தனித்துச் செயல்படுவது கூடாது,” என சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஜலாலுடின் அப்துல் ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறினார்.

தனது குளிர்சாதன பெட்டியில் (குளிர்பதனேற்றி – ஏர்கோன்) ஏற்பட்ட கோளாறை சரிசெய்வதற்காக அந்த மெக்கானிக்கை மட் மலாயா அணுகியதாகவும், அப்போது அந்த மெக்கானிக்குடன் மட் மலாயா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஜலாலுடின் விவரித்தார்.

இதையடுத்து அந்த மெக்கானிக்கை மட் மலாயா மூன்று முறை சுட்டுவிட்டு தப்பியோட, அந்தக் கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.