Home நாடு 11-வது மலேசியத் திட்டம் குறித்து வான் அசிசா கவலை

11-வது மலேசியத் திட்டம் குறித்து வான் அசிசா கவலை

414
0
SHARE
Ad

wan-azizahகோலாலம்பூர், மே 22 – 11ஆவது மலேசியத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் பெறக்கூடிய வருமானம் எவ்வாறு செலவிடப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

2020-க்கு இன்னும் 5 ஆண்டுகளே உள்ள நிலையில், அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறையின் மூலம் எவ்வாறு இலக்குகளை எட்ட முடியும் என்றும் தாம் கவலைப்படுவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஜிஎஸ்டி எவ்வாறு செலவிடப்படும்? அந்தப் பணம் எங்கே செல்லும்? நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,” என்று பெர்பாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அசிசா தெரிவித்தார்.

முன்னதாக 11ஆவது மலேசியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நஜிப், ஜிஎஸ்டி மூலம் பெறப்படும் வருமானம் மீண்டும் பொது மக்களின் நலனுக்காகவே செலவிடப்படும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“பல்வேறு இனங்களுக்கிடையே உள்ள வருமான இடைவெளியைக் குறைப்பது மட்டுமல்லாமல் ஒரே இனத்தில் இருக்கக்கூடிய இத்தகைய இடைவெளியையும், பணக்காரர் ஏழைகளிடையேயான இடைவெளியையும் குறைப்பது தொடர்பில் அக்கறை கொண்டுள்ளோம். 11ஆவது மலேசியத் திட்டம் குறித்து விரிவாக ஆராய்ந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை நாடாளுமன்ற விவாதத்தின்போது பின்னர் தெரிவிப்போம். எத்தகைய வாக்குறுதியை வேண்டுமானாலும் அளிக்கலாம். ஆனால் அவற்றை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.”

“2020-ஐ நோக்கிய பயணத்தின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம். எனவே துரித செயல்பாடு தேவை. மலேசியா தனது ஜனநாயகத்தை விரிவுபடுத்த வேண்டும். மாறாகச் சுருங்கிவிடக் கூடாது. அப்போதுதான் 2020ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அனைவரும் எட்டிப் பிடிக்க வேண்டும் எனும் குறிக்கோள் நிறைவேறும்,” என்று வான் அசிசா மேலும் தெரிவித்தார்.