Home நாடு கினபாலுவில் சுற்றுலா பயணிகள் எடுத்த நிர்வாண படத்தால் சர்ச்சை!

கினபாலுவில் சுற்றுலா பயணிகள் எடுத்த நிர்வாண படத்தால் சர்ச்சை!

621
0
SHARE
Ad

sabah_naked_2_0206_620_348_100

கோத்தகினபாலு, ஜூன் 4 – கினபாலு சிகரத்தின் உச்சியில் நின்று நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள், அப்படங்களை இணையம் வழி பகிர்ந்து கொண்ட செயல் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழு கடந்த மே 10ஆம் தேதி இப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது 10 பேர் மட்டும் தனியாகப் பிரிந்து சென்று இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

கனடா நாட்டவர்கள் 2 பேர், டச்சு நாட்டவர்கள் 2 பேர், ஜெர்மானியர் ஒருவர் உள்ளிட்டோர் அடங்கிய அக்குழுவில் 6 ஆடவர்களும், 4 பெண்களும் இருந்தது தெரியவந்துள்ளது.

அவர்களின் செயலைக் கண்டு பதறிப்போன சுற்றுலா வழிகாட்டி, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது தவறு என்று கூறியுள்ளார்.

“ஆனால் அச்சுற்றுலா பயணிகள் அவரது வார்த்தைகளைப் பொருட்படுத்தவில்லை. மாறாக அவரை ‘முட்டாள்’ என்றும் ‘நரகத்திற்கு செல்’ என்றும் ஏசியுள்ளனர். ஆனால் அச்சுற்றுலா வழிகாட்டி சம்பவம் நடந்த அன்றைய தினமே நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அதுகுறித்து முறையிடவில்லை,” என்று சபா பூங்கா இயக்குநர் டாக்டர் ஜமிலி நாய்ஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 10 சுற்றுலா பயணிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நடைபெற்ற அநாகரிகமான செயல் குறித்து தகவல் தெரிவிக்காத சுற்றுலா வழிகாட்டிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

வாட்ஸ் அப் மற்றும் நட்பு ஊடகங்கள் வழி அக்குறிப்பிட்ட நிர்வாணப் படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. அப்படங்களில் உள்ள 10 பேரில் 5 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் ஜமிலி குறிப்பிட்டார்.