Home நாடு பிகேஆர் உதவித் தலைவர் தேர்தல் – மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எத்தனை?

பிகேஆர் உதவித் தலைவர் தேர்தல் – மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எத்தனை?

283
0
SHARE
Ad

ஜோகூர்பாரு: நேற்று வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் ரபிசி ரம்லி, துணைத் தலைவருக்கான போட்டியில் தோல்வியடைந்தார்.

எனினும் அவரை ஆதரித்த இரண்டு உதவித் தலைவர் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

நூருல் இசாவை ஆதரித்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேவேளையில் ரபிசி ரம்லிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருண், அமைச்சர் சாங் லீ காங் ஆகியோரும் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் உதவித் தலைவருக்கான போட்டியில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்களை அரசியல் பார்வையாளர்கள் அணுக்கமாகக் கண்காணித்துத் தங்களின் கண்ணோட்டங்களை வழங்கி வருகின்றனர்.

போட்டியிட்ட நான்கு இந்திய வேட்பாளர்களில் ரமணன் வெற்றி வாகை சூடியிருப்பது பல இனக் கட்சியான பிகேஆரின் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

நான்கு உதவித் தலைவர்களுக்கான போட்டியில் இரண்டு மலாய்க்கார வேட்பாளர்கள், ஒரு சீனர், ஓர் இந்தியர் வெற்றி பெற்றிருப்பது, பிகேஆர் கட்சியின் பல இனத் தோற்றத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.டத்தோஸ்ரீ ரமணன் நான்கு உதவித் தலைவர்களில் அதிக வாக்குகளில் இரண்டாவது நிலையில் வெற்றி பெற்றிருக்கிறார்.

போட்டியிட்ட மற்ற இந்திய வேட்பாளர்களில் மணிவண்ணன் கோவின் 2,432 வாக்குகள் பெற்றிருக்கிறார். கடந்த 2022-இல் நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் போட்டியிட்ட மணிவண்ணன், 5-வது உதவித் தலைவராக அதிக வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த முறை அவரை விட மற்றொரு இந்திய வேட்பாளரான டாக்டர் சத்திய பிரகாஷ் மணிவண்ணனை விட அதிக வாக்குகள் பெற்றார். அவருக்கு 2,573 வாக்குகள் கிடைத்தன.

இந்த முறை போட்டியிட்ட மற்ற முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்களைப் பார்ப்போம்.

மற்றொரு இந்திய வேட்பாளரான சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.யுனேஸ்வரன் 1,231 வாக்குகள் மற்றுமே பெற்று உதவித் தலைவர் போட்டியில் கடைசி வேட்பாளராக இடம் பெற்றார்.

உதவித் தலைவர் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஷாரி 7,955 வாக்குகள் பெற்று முதலாவது உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாவதாக துணையமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ஆர்.ரமணன் 5,895 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் 5,889 வாக்குகள் பெற்று மூன்றாவது உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமைச்சர் சாங் லீ காங் 5,757 வாக்குகள் பெற்று நான்காவது உதவித் தலைவராக வெற்றி பெற்றார். அவரை அடுத்து ஐந்தாவது வேட்பாளராக அமைச்சர் நிக் நாஸ்மி அதிக வாக்குகளைப் பெற்றார்.