Home உலகம் பாதுகாப்பு, ஆடம்பர வசதி, மதுபானங்கள் – வடகொரிய அதிபரின் இரகசிய இரயில்!

பாதுகாப்பு, ஆடம்பர வசதி, மதுபானங்கள் – வடகொரிய அதிபரின் இரகசிய இரயில்!

1059
0
SHARE
Ad
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் பயணத்தின் போது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்

ஹாங் காங் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், உலக அதிபர்களிலேயே சற்று வித்தியாசமானவராக தான் பார்க்கப்பட்டு வருகின்றார். பார்க்க குழந்தை முகமாக இருந்தாலும் கூட, அமெரிக்கா உட்பட உலகையே அச்சுறுத்தும் போர் குணம் கொண்ட ஒரு தலைவராக இருந்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், உச்சக்கட்ட பாதுகாப்புடன் வந்த வித்தியாசமான இரயில் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர் தான், அது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீனாவிற்கு வருகை புரிவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரயில் என்பது தெரியவந்தது.

வடகொரிய முன்னாள் அதிபரும், நடப்பு அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தையுமான கிம் ஜோங் இல்
#TamilSchoolmychoice

கிம் ஜோங் உன்னின் தந்தை கிம் ஜோங் இல், தாத்தா ஆகியோரும் கூட இதே உச்சக்கட்ட பாதுகாப்புடன் கூடிய இரயிலைத் தான் வேறுநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது பயன்படுத்தியிருக்கின்றனர். விமானத்தில் பயணம் செய்வது அவர்களுக்கு பயம் என்பதால் இரயில் பயணத்தை விரும்பியதாகக் கூறப்படுகின்றது.

தந்தை மறைவிற்குப் பிறகு அதிபராகப் பொறுப்பேற்ற கிம் ஜோங் உன்னின் முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணம் அமைந்திருக்கிறது. பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து கிம் கலந்தாலோசித்தார். கடைசி வரை அவரது பயணம் மிக இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அந்த இரகசிய இரயிலின் சிறப்பம்சங்கள் குறித்து வெளியாகியிருக்கும் சில தகவல்களை காணலாம்:

1.பச்சை வண்ணம் பூசப்பட்ட இந்த இரயில் மொத்தம் 21 பெட்டிகளைக் கொண்டதோடு முற்றிலும் குண்டு துளைக்காத படி பாதுகாப்பு அரண் கொண்டது.

2.இதன் காரணமாக அளவுக்கு அதிகமான எடை கொண்டு, அதிவேகமாகச் செல்லும் தன்மையுடைய இந்த இரயில், மணிக்கு 59 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.

3. கிம் ஜோங் உன்னின் தந்தை கிம் ஜோங் இல் காலத்தில், அதாவது 2009-ம் ஆண்டு வாக்கில், அவர் பயணம் செய்யும் இரயில் செல்வதற்கு முன்னால், சுமார் 100 பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட முன்கூட்டிய இரயில் ஒன்று சென்று வெடிகுண்டு மற்றும் தண்டவாளங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். அதுமட்டுமின்றி அதிபர் செல்லும் இரயிலுக்கு மேல் இராணுவ ஹெலிகாப்டர்களும், விமானங்களும் பாதுகாப்பிற்கு செல்லும்.

4. இரயிலில் பன்னாட்டு மதுபானங்களும், பன்னாட்டு உணவு வகைகளும் இருக்கும். அதனை எடுத்துப் பரிமாறுவதற்கும், பொழுதுபோக்குவதற்காகவும் நிறைய பெண் கலைஞர்கள் இரயிலில் பயணம் செய்வார்கள் என்றும் கூறப்படுகின்றது. என்றாலும் நடப்பில் கிம் ஜோங் உன் அப்படி ஒரு வசதியை வைத்திருக்கிறாரா? என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை.

5. கடந்த 2004-ம் ஆண்டு, சீனா எல்லை அருகே உள்ள ரோயோங் சோங் என்ற இடத்தில், இந்த இரயில் பயணம் செய்த வழித்தடத்தில், சில மணி நேரங்கள் கழித்து, நடந்த வெடிவிபத்தில் சுமார் 3000 பேர் பலியாகினர்.

6. கடந்த 2011-ம் ஆண்டு கிம் ஜோங் இல், தான் பயணம் செய்த இரயிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்றும் வடகொரிய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.