Home நாடு ஷாபிக்கு எதிராக வழக்காடுகிறார் கோபால் ஸ்ரீராம்

ஷாபிக்கு எதிராக வழக்காடுகிறார் கோபால் ஸ்ரீராம்

915
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு  எதிரான அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் (படம்) தலைமை வகிக்கிறார்.

1எம்டிபி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அரசாங்க வழக்கறிஞராக வழக்காட, குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த, முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்குகளைக் கையாள முன்வந்திருக்கும் கோபால் ஸ்ரீராம் நாட்டுக்கான சேவை அடிப்படையில்தான் வழக்காடவிருக்கிறார் என்றும் அவர் இந்த வழக்குகளுக்காக எந்தவித கட்டணத்தையும் விதிக்கவில்லை என்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஷாபி அப்துல்லா நஜிப்பிடம் இருந்து பெற்ற பணம் 1எம்டிபி ஊழல் தொடர்புடையது எனக் கருதப்படுவதால் ஸ்ரீராம் ஷாபிக்கு எதிரான வழக்கில் அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கிறார்.

ஷாபி அப்துல்லா இன்று அதிகாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார். அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.

பின்னர் அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட் பிணையை (ஜாமீன்) நீதிமன்றம் வழங்கியது.