Home நாடு முன்னாள் மலாக்கா முதல்வர் அலி ருஸ்தாம் அம்னோவிலிருந்து விலகலாம்

முன்னாள் மலாக்கா முதல்வர் அலி ருஸ்தாம் அம்னோவிலிருந்து விலகலாம்

804
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவிலிருந்து முக்கியத் தலைவர்களின் வெளியேற்றம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் மலாக்கா முதலமைச்சராக, 1999 முதல் 2013 வரை பணியாற்றிய முகமட் அலி ருஸ்தாம் (படம்) இன்று ஞாயிற்றுக்கிழமை அம்னோவிலிருந்து வெளியேறும் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் அம்னோவிலிருந்து வெளியேறி பெர்சாத்து கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மலாக்காவின் மற்றொரு முன்னாள் முதல்வரான முகமட் அடிப் முகமட் அம்னோவிலிருந்து விலகி பெர்சாத்துவில் சேர்ந்து விட்டார். அவர் மலாக்காவின் 5-வது முதலமைச்சராகப் பணியாற்றினார்.

இன்று நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் அலி ருஸ்தாம் அம்னோவிலிருந்து வெளியேறும் முடிவை அறிவிப்பதோடு, நாடு முழுமையிலும் பிரச்சாரம் செய்து மேலும் பல அம்னோ தலைவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றச் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்துவார் என்றும் மலாய் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

அலி ருஸ்தாம் அம்னோவிலிருந்து வெளியேறுவது அந்தக் கட்சிக்கு மற்றொரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சராகவும், மலாக்கா மாநில முதலமைச்சராகவும் நீண்டகால அரசியல் பின்னணியைக் கொண்டுள்ள அலி ருஸ்தாம் விலகுவது அம்னோ தொடர்ந்து சிதைந்து வருவதைக் காட்டும் மற்றொரு அறிகுறியாகப் பார்க்கப்படும்.