Home நாடு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : புதிய நிபந்தனைகள் என்ன?

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : புதிய நிபந்தனைகள் என்ன?

485
0
SHARE
Ad
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் – கோப்புப் படம்

கோலாலம்பூர் : எதிர்வரும் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரவிருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்படி புதிய நிபந்தனைகள் என்ன என்பதை இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாமும் கலந்து கொண்டார்.

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிபந்தனைகளின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • உணவகங்கள், பானங்கள் பொட்டலம் மூலமே பெற முடியும். அமர்ந்து உண்ண முடியாது. இந்த நிபந்தனை இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.
  • மருந்தகங்கள், சுகாதார மையங்கள் தொடர்ந்து எப்போதும் போல் செயல்படலாம்.
  • சரக்கு போக்குவரத்துகள் வழக்கமாகச் செயல்படலாம்.
  • தங்கும் விடுதிகள் செயல்பட முடியாது. கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்படுபவர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே இனி தங்கும் விடுதிகள் செயல்படும்.
  • வங்கிகள் வழக்கமாகச் செயல்படலாம்.
  • உற்பத்தித் தொழிற்சாலைகள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் கீழ்க்காணும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கலாம்.
  • இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் தொழிற்சாலைகள் : உணவுப் பொருட்கள் உற்பத்தி, சுகாதாரப் பொருட்கள், மருந்துகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சுகாதார, உணவுப் பொருட்களுக்கான பொட்டலங்கள், பெட்டிகளை அச்சடிக்கும், தயாரிக்கும் தொழில்கள்;
  • எல்லா பேரங்காடிகளும் மூடப்படும். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டும் இயங்கலாம்.
  • 10 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு மட்டுமே பயணம் செய்யமுடியும். அதுவும் ஒரு குடும்பத்தில் இருந்து 2 பேர் மட்டுமே இணைந்து பயணம் செய்ய முடியும். அதுவும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
  • பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.
  • எல்லா கல்வி நிலையங்களும், பள்ளிகளும் மூடப்படும்.
  • இதற்கு முன்னர் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சு விநியோகித்த அனைத்து அனுமதிக் கடிதங்களையும் நாளை மே 31-ஆம் தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஜூன் 1 முதல் அந்த அமைச்சு வெளியிடும் புதிய கடிதங்களைக் கொண்டு மட்டுமே பயணங்கள் மேற்கொள்ள முடியும்.