Home இந்தியா இஸ்ரோவின் சந்திராயன் 3 – விக்ரம் லேண்டர் – நிலவில் தரையிறங்குவது வெற்றி பெறுமா?

இஸ்ரோவின் சந்திராயன் 3 – விக்ரம் லேண்டர் – நிலவில் தரையிறங்குவது வெற்றி பெறுமா?

456
0
SHARE
Ad

புதுடில்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் தென்துருவத்தில் இன்று புதன்கிழமை தரையிறங்குகிறது விக்ரம் ‘லேண்டர்’ என்ற நடமாடும் இயந்திரம்.

கடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதிசெய்தது. அதன்பிறகு, 2019-ம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு ‘சந்திரயான்-2’ விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் ‘லேண்டர்’ கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது.  ஆனால் ‘சந்திரயான்-2’-ல் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ என்னும் கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது.

கடந்த ஜூலை 14-ந்தேதி ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.

#TamilSchoolmychoice

ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்டது ‘சந்திரயான்-3’ விண்கலம். நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த விண்கலம் இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.

இஸ்ரோ வெளியிட்ட – சந்திராயன் 3 அனுப்பிய – நிலவின் புகைப்படங்களில் ஒன்று

கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது. இந்த ‘லேண்டர்’, இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது.

அவ்வாறு லேண்டர் தரையிறங்குவது வெற்றி பெறுமா என்பதைக் காண இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.

‘சந்திரயான்-3’. ‘லேண்டர்’ கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தை பெறும். நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற சாதனையையும் படைக்கும்.