
சென்னை : தமிழ் நாட்டின் திமுக அமைச்சர் பொன்முடி கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க வகையில் சைவம், வைணவம் சமயங்கள் குறித்தும் பெண்கள் பற்றியும் பேசிய பேச்சுக்களால் தமிழ் நாட்டில் கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.
திமுகவிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பொன்முடிக்கு எதிராகக் கடுமையாகச் சாடியுள்ளார். அதைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் அமைச்சுப் பொறுப்பிலிருந்தும் அகற்றப்பட வேண்டும் வேண்டும் என வலுவான கண்டனக் குரல்கள் எழுந்து வருவதால், மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்தும் பொன்முடி நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனது பேச்சுக்கு பொன்முடி மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
“தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்”. என பொன்முடி தெரிவித்துள்ளார்.