
கோலாலம்பூர்: எதிர்வரும் மே 8, 9-ஆம் தேதிகளில் பிகேஆர் கட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில் கட்சியினரின் பார்வைகள் அனைத்தும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் மீது திரும்பியுள்ளது.
இறுதி நேரத்தில் தனது முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமையும், நடப்புத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியையும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் கட்சியில் தனது எதிர்காலம் குறித்து கலந்தாலோசித்ததாகவும் சைபுடின் நசுத்தியோன் கூறியுள்ளார்.
கட்சி தேர்தல் நியமனங்களுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், சைபுடின் நசுத்தியோன் இறைவனின் மீது நம்பிக்கை வைத்து உரிய நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
ரபிசி ரம்லியுடன் நீண்டநேரம் விவாதித்ததாகவும், அன்வாருடன் பல சந்திப்புகளை நடத்தியிருப்பதாகவும் சைபுடின் நசுத்தியோன் மேலும் தெரிவித்துள்ளார்.
ரபிசியை எதிர்த்து சைபுடின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
சைபுடின் நசுத்தியோன், ரபிசி இருவரும் 2022ல் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர். அந்தப் போட்டியில் ரபிசி 16,668 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார். சைபுடின் 2014இல் அஸ்மின் அலி- காலிட் இப்ராஹிமுக்கு எதிராக மும்முனைப் போட்டியில் தோல்வியடைந்தார்.
எனவே, இம்முறை மீண்டும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவர் மேற்கொள்ளும் மூன்றாவது முயற்சியாக இது அமையும்.
எனினும், ரபிசியைத் தோற்கடிக்கும் ஆற்றலும் வல்லமையும் அவருக்கு இருக்கிறதா என்ற கேள்விகளும் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.
ரபிசியின் ஆதரவாளர்கள் பலர் தொகுதி அளவிலான தேர்தல்களில் தோல்வியடைந்திருப்பது சைபுடினின் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இம்முறை பேராளர்கள் மூலம் தேசிய நிலையிலான தலைவர்கள் பிகேஆர் கட்சியில் முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்தப் புதிய தேர்தல் நடைமுறை யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற ஐயப்பாடுகளும் எழுந்துள்ளன.
தொகுதி நிலையில் தோல்வியடைந்தவர்களும் தாங்கள் பெற்ற வாக்குளின் எண்ணிக்கையின் விழுக்காட்டின் அடிப்படையில் பேராளர்களை நியமிக்க முடியும் என்பதால், ரபிசியின் ஆதரவு பேராளர்கள் கணிசமான எண்ணிக்கையில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.