Home நாடு சஞ்சீவனின் வீட்டுத் தபால் பெட்டியில் 3 துப்பாக்கிக் குண்டுகள்

சஞ்சீவனின் வீட்டுத் தபால் பெட்டியில் 3 துப்பாக்கிக் குண்டுகள்

469
0
SHARE
Ad

SANJEEVAN-685x320பகாவ், மே 4 – ஏற்கனவே, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மைவாட்ச் (MyWatch) எனப்படும் சமூக இயக்கத்தின் தலைவரான ஆர். ஸ்ரீ சஞ்சீவனின் பகாவ் நகரிலுள்ள குடும்ப வீட்டில் உள்ள தபால் பெட்டியில் 3 துப்பாக்கிக் குண்டுகள் போடப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இவை  9 மில்லி மீட்டர் அளவுள்ள துப்பாக்கிக் குண்டுகளாகும்.

தற்போது பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதிக்கான உதவித் தலைவருக்கான தேர்தலில் சஞ்சீவன் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை 10.45 மணியளவில் தனது சகோதரர் இந்த குண்டுகளைக் கண்டெடுத்ததாக சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

“முதல் நாள் இரவு நாங்கள் குடும்பத்தினர் அனைவரும் எங்களின் தாயாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வெளியே சென்றிருந்தோம். அப்போது வீட்டில் யாருமில்லை. அப்போதுதான் அந்த குண்டுகள் தபால் பெட்டியில் போடப்பட்டிருக்கலாம்” என தான் சந்தேகிப்பதாக சஞ்சீவன் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி அனாமதேயப் பேர்வழிகளிடமிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாவாய் என்ற மிரட்டல் வந்த பின்னர் 8 மணி நேரம் கழித்து அவர் பகாவ் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரால் சுடப்பட்டார்.

அப்போது, ஒரு போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு சில காவல் துறை அதிகாரிகளின் தொடர்புகளை தான் அம்பலப்படுத்தப் போவதாக சஞ்சீவன் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு காவல் துறை அதிகாரியிடமிருந்து தன்னை சுட்டு மிரட்டப்போவதாக எச்சரிக்கை வந்தது என்றும் சஞ்சீவன் தனது ட்விட்டர் இணையத் தளப் பக்கத்தில் அப்போது பதிவு செய்திருந்தார்.

sanjeevanஒரு சாலை சமிக்ஞை விளக்கில் நின்றிருந்த போது வலது கையிலும் நெஞ்சிலும் சுடப்பட்ட சஞ்சீவன், அதன் பின்னர் இரண்டு மாதம் சுயநினைவின்றி இருந்த பின்னர் உயிர் பிழைத்தார்.

அதே போன்று இப்போதும், அடுத்த சில தினங்களில் போதைப் பொருளோடு சம்பந்தம் உள்ள மற்றொரு காவல் துறை உயர் அதிகாரியின் மகன் பற்றிய விவரங்களை தான் வெளியிட இருப்பதாக சஞ்சீவன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தபால் பெட்டியில் கிடந்த குண்டுகள் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாக இருக்கலாம் என்றாலும், தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாகவும் சஞ்சீவன் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது குறித்து காவல் துறையில் புகார் செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.