Home நாடு எழுத்தாளர் கே.பாலமுருகனின் இரண்டு நாவல்கள் வெளியீடு கண்டன!

எழுத்தாளர் கே.பாலமுருகனின் இரண்டு நாவல்கள் வெளியீடு கண்டன!

1373
0
SHARE
Ad

DSC_0121 - Copyகோலாலம்பூர், மே 14 – கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) அன்று தலைநகரின் சோமா அரங்கத்தில் மதியம் 2 மணிக்கு மேற்பட்டு கே.பாலமுருகன் எழுதிய இரண்டு நாவல்கள் மைஸ்கீல் அறவாறியத்தின் இயக்குனர் திரு.சி.பசுபதி அவர்களின் தலைமையில் சிறப்பாக வெளியீடு கண்டன.

தனது வாழ்த்துரையில் செம்பருத்தி.காமின் ஆசிரியரும் வழக்கறிஞருமான திரு.கா.ஆறுமுகம் அவர்கள் கே.பாலமுருகன் அவர்கள் மிகச் சிறந்த சிறுகதையாளர் என்றும் அவர் கதைச் சொல்லும் உத்தி ஆழமான முறையில் சமூகத்தின் குரல்களைப் பதிவு செய்வதாகவும் தெரியப்படுத்தினார்.

மேலும் அவருடைய படைப்புகள் விமர்சிக்கப்பட வேண்டும் என்றும் பாலமுருகன் விமர்சனத்திற்கெல்லாம் அஞ்சாதவர் என்றும் மேலும் வழியுறுத்திப் பேசினார்.

#TamilSchoolmychoice

DSC_0114

அடுத்ததாக இலக்கிய உரையாற்றிய டாக்டர் மா.சண்முகசிவா அவர்கள் எழுத்தாளர் கே.பாலமுருகனின் எழுத்து மேலும் வலுப்பெற்று தனக்கான ஓர் நிலையான அடையாளத்தைத் தேடுவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என வாழ்த்திப் பேசினார்.

பாலமுருகனின் கதைகளில் இருக்கக்கூடிய சமூக அக்கறையே தன்னைக் கவர்ந்தவை எனச் சுட்டிக் காட்டினார். அதே சமயம் எழுத்தாளர்கள் எழுதுவதோடு மட்டுமல்லாமல் களத்தில் இறங்கி செயல்படக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எழுத்தாளர் ந.பச்சைபாலன் அவர்கள் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் குறுநாவல் புறம்போக்குவாசிகளாக வாழ்ந்த இந்தியர்களின் புலம்பெயர்வு வாழ்வின் பகுதிகளைச் சொல்கிறது எனப் பாராட்டிப் பேசினார்.

DSC_0178

தொடர்ந்து அதுவொரு நல்ல புனைவுக்கான களம் என்றும் அதனை ஒரு நாவலாக விரிவுப்படுத்தி எழுத கே.பாலமுருகன் அவர்களைக் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியின் அடுத்த அங்கமாக ‘மலை உச்சியில் கரையும் மௌனங்கள்’ என்கிற குறுநாவலை எழுத்தாளர் யோகி அவர்கள் விமர்சித்துப் பேசினார்.அந்தக் குறுநாவலின் வர்ணனைகளும் அதன் மொழியும் ஜனரஞ்சக வாசகனைக் கவரக்கூடிய தன்மைகள் இருப்பதாக்க் குறிப்பிட்டார்.

இது கே.பாலமுருகனின் வழக்கமான தீவிர எழுத்தாக இல்லாமல் எல்லோரும் வாசிக்கக்கூடிய அளவில் எளிமையாக இருப்பதாக விமர்சித்தார். இருந்த போதும் பத்திரிகைகளில் வரும் கதைகளிலுள்ள வழக்கமான வர்ணனைகள் சலிப்பைத் தட்டுவதைப் போல் அல்லாமல் கே.பாலமுருகனின் மொழியும் வர்ணனைகளும் படிப்பவர் மனத்தை உடனே கவரும் எனப் பாராட்டினார்.

DSC_0211

அடுத்ததாக, இலக்கியகத்தைத் தோற்றுவித்தவரும் சிறுவர் இலக்கியம் தொடர்பாக நாடெங்கும் பேசி வருபவருமான திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் கே.பாலமுருகனின் சிறுவர் மர்மத் தொடர் நாவல் பாகம் இரண்டை விரிவாக விமர்சித்துப் பேசினார்.

சிறுவர்களுக்கான உலகைச் சொல்ல முனைவதுதான் சிறுவர் இலக்கியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்களின் சாகசங்களையும் உளவியலையும் வாழ்க்கையையும் சொல்லும் விதமான ஒரு மொழி கே.பாலமுருகன் நாவல் முழுக்க இருப்பதால் சிறார்கள் இந்தச் சிறுவர் நாவலை விரும்பி வாசிப்பார்கள் எனவும் விமர்சித்தார். இதனைப் பாலமுருகன் பத்து பாகங்கள்வரை கொண்டு போகவிருப்பதாக விழுதுகள் தொலைகாட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

DSC_0153

அடுத்ததாக, மைஸ்கீல் அறவாறியத்தின் இயக்குனர் திரு.சி.பசுபதி அவர்கள் கே.பாலமுருகனின் ஆப்பே நாவலைப் பாராட்டிப் பேசினார். இதுபோன்ற நாவல்கள் குற்றவாளிகளின் உலகின் நியாயங்களைப் பேசாமல் அவர்களின் வாழ்வைக் காட்டிச் செல்வது சாமான்ய மனிதனுக்கு ஓர் எச்சரிக்கை உணர்வையும் பரந்தப்பட்ட வாழ்க்கை அனுபவத்தையும் கொடுக்கும் எனக் கூறினார். பின்னர் திரு.சி.பசுபதி அவர்கள் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ நாவலை வெளியீட திரு.கா.ஆறுமுகம் அவர்கள் பெற்றுக்கொண்டார். ‘மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்’ எனும் சிறுவர் மர்மத் தொடர் நாவலை திரு.சிபசுபதி வெளியீட திரு.பி.எம் மூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த எழுத்தாளர்கள் நாவல்களை வாங்கி ஆதரித்தனர். மலேசியத் தமிழ்த்திரை இயக்குனர்கள் பிரகாஷ் ஜெயராம், சஞ்சய் பெருமாள் போன்றவர்களும், எழுத்தாளர்கள் ஆ.குணநாதன், இளம்பூரணன், சிவா பெரியண்ணன், சல்மா, சரவண தீர்த்தா, உதய சங்கர், வ.முனியன், மஹாத்மன் போன்றவர்களும், மலாயாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு.குமரன் சுப்ரமணியம், தமிழ்ப்பேரவை கதைகள் இயக்குனர் யாழினி போன்றவர்களும் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டனர்.

நாவல்கள் தொடர்பான மேல் விவரங்களுக்கு கே.பாலமுருகன் 0164806241