Home இந்தியா சுற்றுப் பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார் மோடி!

சுற்றுப் பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார் மோடி!

411
0
SHARE
Ad

modi-smile-11-600தென்கொரியா, மே 20 – மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார் சீனா, மங்கோலியா மற்றும் தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த 14-ஆம் தேதி சீனாவுக்குச் சென்ற மோடி, அங்கு சீன அதிபர்  ஜி ஜின்பிங்கை அவருடைய சொந்த ஊரான ஜியானில் சந்தித்து பேசினார். அதற்கடுத்த நாள் பெய்ஜிங்கில் சீன பிரதமர் லீ ககியாங்கை சந்தித்து பேசினார்.

இந்த  சந்திப்புகளின்போது எல்லைப் பிரச்சனை குறித்து பேசிய மோடி, விரைவில் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். சீன பயணத்தின்போது ரூ.1.38  லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்யும் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

#TamilSchoolmychoice

சீன பிரதமர் லீயுடன் மோடி எடுத்துக் கொண்ட தம்படம் (செல்ஃபி) உலகெங்கும்  பரவலாக வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 16-ஆம் தேதி சீன தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்யும்படி வலியுறுத்தினார்.

அதே நாள் மங்கோலியாவுக்குச் சென்றார்  மோடி. மங்கோலியாவுக்கு ரூ.6000 கோடி நிதியுதவி திட்டங்களை அறிவித்தார். மங்கோலியாவுக்கு இந்தியத் தலைவர் ஒருவர் பயணம் மேற்கொள்பது இதுவே முதல்  முறையாகும்.

நேற்று முன்தினம் தென்கொரியாவுக்கு சென்றடைந்த மோடி, தென் கொரிய அதிபர் பார்க் குயின்யேவை சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதாரம்  மற்றும் பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதைத் தவிர இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே, மின் உற்பத்தி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.64,000 கோடி கடனுதவி அளிக்க தென் கொரியா  முன்வந்தது.

உல்சானில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனமான  ஹூண்டாய் நிறுவனத்துக்குச் சென்று பார்வையிட்டார் மோடி. இந்தியாவில் இத்துறையில்  ஒத்துழைப்பு அளிக்கும்படி அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

தனது மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று உல்சானில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார் பிரதமர் மோடி. இந்தப் பயணம் மிகவும் வெற்றிகரமாக  அமைந்துள்ளது.

மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட மனநிறைவைத் தருகிறது. இந்தப் பயணத்தின் மூலம் இந்த நாடுகளுடனான நமது உறவு வலுப்பெறும் என்ற  நம்பிக்கை உள்ளது என்று தனது செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.