Home நாடு கடும் மழை செப்டம்பர் 21 வரை தொடரும் – வானிலை இலாகா எச்சரிக்கை!

கடும் மழை செப்டம்பர் 21 வரை தொடரும் – வானிலை இலாகா எச்சரிக்கை!

176
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: தீபகற்ப மலேசியாவின் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் வட மாநிலங்களில் தொடர்ச்சியான கடும் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை இலாகா வெளியிட்டுள்ளது.

தீபகற்பத்தின் வடக்கு பகுதி மற்றும் சபாவின் மேற்குப் பகுதியில் ஏற்படும் காற்று அழுத்தம் செப்டம்பர் 21 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில் வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளில் கனத்த மழையுடன் கூடிய இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று, தென் சீனக் கடல் மற்றும் வட மலாக்கா நீரிணைப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்தை ஏற்படுத்தும் என்று மெட் மலேசியா என்னும் மலேசிய வானிலை இலாகா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மற்ற மாநிலங்களில் வாரம் முழுவதும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

“பொதுமக்கள் அண்மையச் செய்திகளுக்கு www.met.gov.my என்றமெட் மலேசியா இணையதளத்தைப் பார்க்குமாறும், அதன் சமூக ஊடகத் தளங்களைப்  பின்பற்றுமாறும் அல்லது myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று வானிலை இலாகா மேலும் கூறியது.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) இரவு 10 மணி அளவில் வெளியிடப்பட்ட புதுப்பிப்பில், புதன்கிழமை அதிகாலை 1 மணி வரை பேராக் மாநிலத்தின் மஞ்சுங், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பாகான் டாத்துக், ஹிலிர் பேராக், பத்தாங் படாங் மற்றும் முவாலிம் ஆகிய மாவட்டங்களிலும், பாகாங் மாநிலத்தின் கேமரூன் மலைப்பகுதி மற்றும் லிப்பிஸ் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை இலாகா குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் பினாங்கு மாநிலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) அதிகாலையில் பெய்த கடும் மழையினாலும் பலத்த புயல் காற்றினாலும் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

நேற்று அதிகாலை 5.00 மணி தொடங்கி காலை 9 மணி வரை கடும் மழை பெய்தது. எனினும் இதுவரையில் வெள்ள நிவாரண மையங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

பாயா தெருபோங், ரெலாவ், புக்கிட் ஜாம்புல், புலாவ் திக்குஸ், பாயான் பாரு, பாலிக் புலாவ் ஆகிய வட்டாரங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகத் கவல்கள் தெரிவித்தன.

பெர்மாத்தாங் ராவா, பெர்டா, பாயான் லெப்பாஸ் நிபோங் திபால் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டன.

சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் கார்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன. விபத்துகளும் ஏற்பட்டன.