பட்டவொர்த் : பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதி கையாளப்பட்ட விதத்தில் நம்பிக்கை மோசடி செய்ததாக அந்த வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பி.இராமசாமி மீது இன்று நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
2010 முதல் 2023 அவர் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராகச் செயலாற்றியிருக்கிறார். மே 2019 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தில் அறப்பணி வாரியத்தின் நிதியை வாரியக் கூட்டத்தின் அனுமதி இன்றி அவர் பயன்படுத்தியதாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் விவரிக்கின்றன.
தங்கக் கவசம் பொருத்தப்பட்ட தங்க ரதம் 2019-இல் பெறப்பட்டது, தனிநபர்களுக்கான கல்வி உதவி நிதிகள், மருத்துவ உதவிகள் ஆகியவை தொடர்பில் அந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
76 வயதான இராமசாமி, முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வருமாவார். குற்றவியல் பிரிவு 409-இன் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, பிரம்படிகள், அபராதம் ஆகியவை அவர்மீது விதிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வயது காரணமாக அவருக்கு பிரம்படிகள் வழங்கப்பட மாட்டாது.
பட்டவொர்த் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) நீதிபதி சுல்ஹாஸ்மி அப்துல்லா முன்னிலையில் இன்றைய வழக்கு விசாரணையில் இராமசாமி மீது மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குற்றச்சாட்டுகளை மறுத்து இராமசாமி விசாரணை கோரினார்.