Home One Line P1 கிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்!- முகமட் ஹசான்

கிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்!- முகமட் ஹசான்

700
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிமானிஸ் தொகுதியின் 2018-ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவை கூட்டரசு நீதிமன்றமும் செல்லாது என்று தெரிவிக்கும் பட்சத்தில், அத்தொகுதியில் மீண்டும் ஆட்சியைப் பெறுவதற்கு அம்னோ தயாராக உள்ளது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

கிமானிஸ் தொகுதிக்கான அம்னோவின் இயந்திரங்களை உடனடியாகத் தயார் நிலையில் இருக்க சபா மாநில அம்னோ இப்போதிலிருந்தே வேலையில் இறங்கலாம் என்று அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பையும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான உரிய செயல்முறையையும் நாங்கள் மதிக்கிறோம். இறுதி முடிவுக்காக நாங்கள் காத்திருப்போம். இருப்பினும், இடைத்தேர்தல் நடக்க வேண்டுமானால் தேர்தல் இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க சபா அம்னோ உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகளை தேர்தல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இரத்து செய்தது. இதன் மூலமாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் அத்தொகுதியில் வென்றது ஏற்றுக் கொள்ளப்படாத சூழல் ஏற்பட்டது.

குறிப்பிட்ட ஒரு வாக்குச் சாவடியில் 284 கூடுதல் வாக்குகள் முறையற்ற முறையில் பதிவாகியுள்ளதாகவும், 57 கூடுதல் வாக்குகள் மற்றொரு வாக்களிப்பு மையத்தில் முறையற்ற முறையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக நீதிபதி லீ ஹெங் சுங் தெரிவித்தார்.