Home One Line P1 நீர் மாசுபாடு: 4 நிறுவன இயக்குநர்கள், பட்டறை மேலாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது

நீர் மாசுபாடு: 4 நிறுவன இயக்குநர்கள், பட்டறை மேலாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது

458
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை கோங்கில் ஏற்பட்ட மாசுபாடு தொடர்பாக நான்கு நிறுவன இயக்குநர்கள் மற்றும் பட்டறை மேலாளர் மீது இங்குள்ள செலாயாங் அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

இதன் விளைவாக சமீபத்தில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்டனர்.

சகோதரர்களான யிப் கோக் வாய், 53; யிப் கோக் முன், 58; யிப் கோக் குயின், 70; மற்றும் 60 வயதான யிப் கோக் வோங் ஆகியோர் யிப் சீ செங் அண்ட் சன்ஸ்செண்டெரியான் பெர்ஹாட்டின் உரிமையாளர்கள் ஆவர். ஹோ வூன் லியோங், 59, பட்டறையின் மேலாளராக உள்ளார்.

#TamilSchoolmychoice

அவர்கள் அனைவரும் நீதிபதி சபீரா முகமட் சைட் முன்னிலையில் தங்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றத்தினை மறுத்து விசாரணைக் கோரினர்.

அவர்கள் அனைவருமே தண்டனைச் சட்டத்தின் பிரிவு 430- இன் கீழ் அபாயகரமான கழிவுகளை சுங்கை கோங்கில் அகற்றியதன் மூலம் தவறான செயல்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அண்மையில்,  சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த நான்கு தொழிற்சாலைகளின் மேலாளர்கள் (மானேஜர்) கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அசுத்தமான எண்ணெய்க் கழிவுகளால் நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையங்கள் தங்களின் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக சேவைகளை வியாழக்கிழமை (செப்டம்பர் 3) முதல் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதன் காரணமாக, சிலாங்கூரின் 1,292 பகுதிகளில் உள்ள சுமார் 1.2 மில்லியன் இல்லங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டது.

இதனிடையே, நீர் மாசு குறித்த விவகாரத்தை சொஸ்மா சட்டம் கீழ் விசாரிக்கும் சாத்தியக் கூறுகளை காவல் துறை ஆராய்ந்து வருவதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஒருவேளை நாச வேலைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென்று அவர் கூறியிருந்தார்.

இந்த அணுகுமுறை எதிர்கால நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று அப்துல் ஹாமிட் தெரிவித்திருந்தார்.