Home நாடு கேமரன் மலை இடைத் தேர்தல்: சிவராஜ் மேல்முறையீடு செய்கிறார்

கேமரன் மலை இடைத் தேர்தல்: சிவராஜ் மேல்முறையீடு செய்கிறார்

979
0
SHARE
Ad
சிவராஜ் சந்திரன் – மனோகரன்

கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கேமரன் மலை நாடாளுமன்றத்தில் பெற்ற வெற்றி செல்லாது என இன்று கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியிருப்பதை அடுத்து அந்தத் தீர்ப்பை எதிர்த்து கேமரன் மலையின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவராஜ் சந்திரன் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இன்றைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிவராஜூக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரந்தாவ் சட்டமன்றத் தேர்தலும் செல்லாது என சிரம்பான் தேர்தல் நீதிமன்றம் அறிவித்திருக்கும் வேளையில் அந்தத் தீர்ப்பை எதிர்த்து ரந்தாவ் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மேல்முறையீடு செய்திருப்பதாக நேற்று வியாழக்கிழமை அறிவித்தார். அதே அடிப்படையில் சிவராஜூம் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்றைய கேமரன் மலை நாடாளுமன்றம் மீதான தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பகாங் தேசிய முன்னணி  விவாதிக்கும் என பகாங் மாநில மந்திரி பெசாரும் மாநில தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறினார். கேமரன் மலை நாடாளுமன்றத்தின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான ஜெலாய் சட்டமன்றத்தின் உறுப்பினர் வான் ரோஸ்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணியும் கேமரன் மலை நாடாளுமன்ற மறுதேர்தல் குறித்து தனது அடுத்த கூட்டத்தில் விவாதிக்கும் என துணைப் பிரதமரும் பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவருமான வான் அசிசா அறிவித்துள்ளார்.