Home நாடு தானியங்கி வாக்களிக்கும் செயல்முறையை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை!

தானியங்கி வாக்களிக்கும் செயல்முறையை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை!

655
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வாக்களிக்கும் வயதை 21-லிருந்து  18-க்கு குறைக்கும் தீர்மானம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, தானியங்கி வாக்காளர் பதிவுக்கு அனுமதிக்க தேர்தல் ஆணையத்திற்கு போதுமான கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதன் தொடர்பில் இப்போது ஏராளமான பணிகள் அவ்வாணையம் செய்ய வேண்டி உள்ளதாகவும் தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம் கூறினார்.

தானியங்கி செயல்முறை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு தொழில்நுட்ப அம்சங்களும், அமைப்பும் சிறப்பாக செயல்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த மாற்றத்திற்கு நீண்ட நாள் ஆகக்கூடும் என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், வாக்களிக்கும் வயது வரம்பு தொடர்பாக மத்திய அரசியலமைப்பில் மாற்றங்களை செயல்படுத்த நிறைவேற்றப்பட்ட மசோதாவை தேர்தல் ஆணையம் வரவேற்பதாக அவர் கூறினார்.

தானியங்கி பதிவு முறையால் வாக்களிக்கும் தினத்தன்று வாக்காளர்களின் முடிவுகளை பாதிக்கும் முயற்சிகளைக் குறைக்கும் என்று அஸ்மி குறிப்பிட்டார்.

வாக்களிக்கும் வயது வரம்பினை 21-லிருந்து 18-க்கு குறைக்கும் கூட்டரசு அரசியமைப்புச் சட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை திருத்தப்பட்டது. வாக்களிக்கும் வயதைக் குறைக்கும் 2019-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் (திருத்தம்) மசோதா மொத்தம் 211 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஒருமனதாக இந்த மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மகாதீர் முகமட் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதன் வழியாக மலேசிய வரலாற்றில் முதன் முதலாக அரசாங்கத்தின் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு அளித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளார்கள் எதிர்க்கட்சியினர்.

முன்னதாக கடந்த 2008-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தேசிய முன்னணி ஆட்சியில் இருக்கும் போது, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்காத போது, இம்மாதிரியான சட்டத் திருத்தங்களுக்கு அப்போதைய எதிர்கட்சியினர் ஆதரவு அளிக்காதது குறிப்பிடத்தக்கது.

இக்காலக்கட்டதில், ஆளும் கட்சிக்கு அதே மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத தருணத்தில் நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தோடு ஒன்றிணைந்து செயல்படும் நிலை ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.