Home One Line P1 ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் மீண்டும் மகாதீர் கட்சியில்…

ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் மீண்டும் மகாதீர் கட்சியில்…

1032
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கிறது ஜோகூர் மாநிலத்தின் தேசியக் கூட்டணி ஆட்சி. எந்த நேரத்திலும் மாநில அரசாங்கம் கவிழலாம் என்ற ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஜோகூரின் முன்னாள் மந்திரி பெசாரும் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவருமான ஒஸ்மான் சபியான் நேற்று சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மகாதீரின் பெஜூவாங் கட்சியினரோடு இணைந்து காணப்பட்டார்.

இது ஜோகூர் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலிம் பிரச்சாரத்தில் ஒஸ்மான் சப்பியான்

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) சிலிம் தொகுதியில் பெல்டா துரோலாக் செலாத்தான் தேர்தல் நடவடிக்கை அறைக்கு முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் வருகை தந்து மகாதீரோடு காணப்பட்டார்.

அங்கு பெஜூவாங் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் அமிர் குஷாயிரி முகமட் தனுசிக்கு (படம்) ஆதரவாக ஒஸ்மான் சப்பியான் முழக்கமிடும் காணொளிக் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

எனினும் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு நண்பர்களை சந்திக்க மட்டுமே வந்தேன் என்று கூறியதாகவும், பிரச்சராம் செய்ய வரவில்லை, வெறுமனே பார்வையிடவே வந்தேன் என்றும் கூறியதாகவும் மலேசியாகினியின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற பெர்சாத்து கட்சித் தேர்தலில் உச்சமன்றக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் ஒஸ்மான் சபியான் தோல்வியடைந்தார். கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் செயல்படுகிறார்.

ஊசலாடும் ஜோகூர் மாநில அரசாங்கம்

தேசிய முன்னணி, பாஸ், பெர்சாத்து இணைந்த ஜோகூர் தேசியக் கூட்டணி 29 தொகுதிகளோடு மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது. மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 27 தொகுதிகள் நம்பிக்கைக் கூட்டணி வசம் இருக்கின்றன.

எனவே, ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சி தாவினாலும், இரு தரப்புகளுக்கும் இடையிலான பலம் சரிசமமாகி விடும். ஆட்சியும் ஆட்டம் கண்டு விடும்.

ஜோகூர் மாநிலத்தில் கட்சித்தாவல்கள் மீண்டும் அரங்கேறினால், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு வழிவிடுவேன் என ஜோகூர் சுல்தான் இப்ராகிம் எச்சரித்திருக்கிறார்.

துன் மகாதீர் புதிய கட்சி தொடங்கியதிலிருந்து பெர்சாத்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அவருக்கு ஆதரவாக பெர்சாத்துவில் இருந்து வெளியேறுவார்கள் என்ற ஆரூடங்கள் நிலவி வருகின்றன.

இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜோகூர் மாநிலத்திற்கு வருகை தந்தபோது மொகிதின் யாசின் தேசியக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களையும் இரவு விருந்து ஒன்றில் சந்தித்தார். அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வண்ணம் இரகசியமாக – மூடிய கதவுகளுக்குப் பின்னால் – மொகிதினின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

மாநிலத்தில் நூலிழையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜோகூர் மாநில அரசாங்கம் எந்நேரத்திலும் கவிழக் கூடும் என்ற ஆரூடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் மொகிதினின் வருகை அமைந்திருந்தது.

இன்னொரு புறத்தில் பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு இடையிலான புகைச்சலும், மோதல்களும் உச்சகட்டத்தில் இருப்பது ஜோகூர் மாநிலத்தில்தான்!

துன் மகாதீர் புதிதாக பெஜூவாங் என்ற என்ற கட்சியைத் தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் பெர்சாத்து பிளவு பட்டு வருகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மகாதீரின் கட்சி தனது வேட்பாளரைக் களமிறக்குகிறது.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள சில பெர்சாத்து தொகுதிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் மகாதீரின் கட்சியில் இணையலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.

கோத்தா திங்கி பெர்சாத்து தொகுதியின் எட்டு கிளைகளோடு அந்தத் தொகுதி மகாதீரின் கட்சியில் இணைவதாக அறிவிப்பு வெளியாகியது.

ஶ்ரீ காடிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஷாஹாருடின் சாலே ஜோகூர் மாநிலத்தின் 70 விழுக்காடு உறுப்பினர்கள் பெர்சாத்துவிலிருந்து விலகி மகாதீர் பெஜூவாங் கட்சியில் இணைவார்கள் என கணித்திருக்கிறார். துணையமைச்சராக இருந்த ஷாஹாருடின் சாலே மொகிதின் அணியிலிருந்து விலகி, துணையமைச்சர் பதவியையும் துறந்து மகாதீரோடு இணைந்தவராவார்.

இதற்கிடையில் அம்னோ-பாஸ் இணைந்துள்ள முவாபாக்காட் நேஷனல் கூட்டணியில் புதிதாக இணையப் போவதாகவும் மொகிதின் யாசின் அறிவித்திருக்கிறார்.

இதன் காரணமாகவும், அதிருப்தி அலைகள் கட்சியில் எழுந்திருக்கிறது.

பெர்சாத்து தனது தனித்தன்மையை இழக்கிறது – கட்சியை மொகிதின் அம்னோவிடம் அடமானம் வைத்து விட்டார் – தனது இலக்குகளில் இருந்து பெர்சாத்து விலகி விட்டது –  என்றெல்லாம் எதிர்ப்புக் குரல்களின் ஓசை வலுத்துக் கொண்டே வருகிறது.

செப்டம்பர் 10 – பலப்பரிட்சை

எதிர்வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் இரண்டு நாள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவராக தற்போது அமானா கட்சியின் ஷைசான் கையாட் செயல்படுகிறார்.

எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்திற்கான தீர்மானங்கள் எதையும் தான் இன்னும் பெறவில்லை என்றும் ஷைசான் கையாட் தெரிவித்திருக்கிறார்.

அந்த சட்டமன்றக் கூட்டத்தின்போது அவைத் தலைவரை நீக்கும் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அவ்வாறு கொண்டு வரப்பட்டால், தேசியக் கூட்டணிக்கும், நம்பிக்கைக் கூட்டணிக்கும் இடையில் யாருக்குப் பெரும்பான்மை என்பதை நிர்ணயிக்கும் பலப்பரிட்சைக் களமாக அன்றைய சட்டமன்றக் கூட்டம் அமையக் கூடும்!