Home One Line P1 சபா: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தி அன்வாருக்கு சாதகமாக அமையலாம்

சபா: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிருப்தி அன்வாருக்கு சாதகமாக அமையலாம்

534
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவின் பிடியிலிருந்து எடுக்கப்பட்டு, சபா பெர்சாத்து தலைவருக்கு வழங்கப்பட்ட முதல்வர் பதவி, அக்கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.

இது புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நன்மையைத் தரக்கூடும். ஆனால், அதன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லாதது போல் தெரிகிறது.

சபா தேர்தலுக்கு முன்பே, அம்னோவின் உயர் தலைமை, அன்வாருக்கு சாதகமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதை உறுதிப்படுத்தியது.

#TamilSchoolmychoice

செப்டம்பர் 23 அன்று, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக மக்களவையில் தனக்கு பெரும்பான்மை கிடைத்ததாக அன்வார் கூறினார். சில மணி நேரத்தில், அம்னோ அதிபர் அகமட் சாஹிட் ஹமிடி “பல” அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவளித்ததை உறுதிப்படுத்தினார்.

இப்போது, ​​சபா பெர்சாத்து முதல்வர் ஹாஜிஜி நூர் புதிய சபா முதல்வராக அறிவிக்கப்பட்டதால் அந்த அதிருப்தி மேலும் பெரிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்னோ, தேசிய முன்னணி இந்த பதவியை பெர்சாத்துவுக்கு ஒப்படைப்பது மிகப் பெரிய இழப்பாகும் என்று சாஹிட் கூறியிருந்தார். சபா தேசிய முன்னணித் தலைவர் புங் மொக்தார் ராடின் புதிய முதல்வராக இருக்க வேண்டும் என்று அம்னோ விரும்பியது.

மாநில தேசிய முன்னணி (அம்னோ, மசீச, பிபிஆர்எஸ்),தேசிய கூட்டணி (பெர்சாத்து, ஸ்டார், எஸ்ஏபிபி) மற்றும் பிபிஎஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய சபா மக்கள் கூட்டணி (ஜிஆர்எஸ்) கடந்த சனிக்கிழமை சபா தேர்தலில் போட்டியிட்ட 73 மாநில தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்றது.

ஜிஆர்எஸ்ஸில், அம்னோ ஒரு கட்சியாக 14 தொகுதிகளில் அதிகம் வென்றது.

ஒரு கூட்டணியாக, தேசிய கூட்டணி 17 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த தேர்தல் முடிவின் காரணமாக முன்னாள் சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தொடர்வது கேள்வியை எழுப்பும்.

மேலும், அவருக்கான ஆதரவும் சரியத் தொடங்கலாம். பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிற்குப் பதிலாக, ஷாபி அப்டாலை துன் மகாதீர் முகமட் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருந்தார். சபா தேர்தலில் தோல்வி அடைவதற்கு முன்பதாக அவருக்கான ஆதரவு பெரிய அளவில் இருந்தது, ஆயினும், தற்போது, இந்த தோல்வினால், அன்வாரின் கை ஓங்கி உள்ளதாகவே எண்ணலாம்.

ஒரு வேளை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு வழங்கி செயல்பட்டால், ஷாபியும் அதே நடைமுறையை ஏற்பதற்கான சாத்தியங்களும் உள்ளன.